Published : 12 Dec 2021 03:09 AM
Last Updated : 12 Dec 2021 03:09 AM

தாம்பரம் மாநகராட்சி நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பு

தாம்பரம்

தாம்பரம் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டபின், அருகிலுள்ள நகராட்சி, பேரூராட்சிகள் இணைக்கப்பட்டன. மாநகராட்சிக்கு பல்வேறு வரி வருவாய், குத்தகை இனங்கள் மூலமும் ஆண்டுக்கு சுமார் ரூ.75 கோடி வருமானம் வருகிறது. பொது நிதியான இதிலிருந்து அலுவலர்களின் ஊதியம், குடிநீர் வசதி மின்கட்டணம், சுகாதார அடிப்படை வசதிக்கு கணிசமான நிதி ஒதுக்கப்படுகிறது.

அதுமட்டுமன்றி இந்நிதி மூலம் சாலை, கால்வாய் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. மாதம் மாதம்ஊழியர்களுக்கு மட்டும் சுமார் ரூ. 6 கோடி ஊதியமாக வழங்கப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகத்துக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டு, மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.

மாநகராட்சிக்கு சொந்தமான வாகனங்களில் ஏற்பட்டுள்ள பழுதை சீர்செய்ய முடியவில்லை. சேதமான தளவாட பொருட்களை சரிசெய்ய முடியாத நிலையில் நிர்வாகம் தவிக்கிறது.

எனவே, அரசுதனிப்பட்ட முறையில் நிதி ஒதுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து மாநகராட்சியில் வரி பாக்கிகளை முறையாக வசூல் செய்தும், பொதுநிதியை ஒதுக்கீடு செய்தும் தாம்பரம் மாநகராட்சியை மீட்டெடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாநகராட்சி மக்களுக்கு தேவையான பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து வருகிறது. இதற்காக பொதுமக்களிடம் இருந்து குடிநீா் வரி, புதிய குடிநீா் இணைப்புக்கான கட்டணம், சொத்து வரி, வீட்டு வரி, பிறப்பு - இறப்பு சான்றிதழ் வழங்குதல், வீடு கட்ட அனுமதி கட்டணம், மின்மயான வரி என பல்வேறு வகையிலும் நகராட்சிக்கு வருமானம் வருகிறது. தவிர, அரசாங்கம் ஒதுக்கீடு செய்யும் நிதியைப் பயன்படுத்தி அடிப்படை வசதிகள் செய்யப்படுகின்றன.

தாம்பரம் மாநகராட்சி நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பது உண்மைதான். தற்போது, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால் பொது மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்வதற்கு கூடுதல் நிதி தேவைப்படுகிறது.

இந்நிலையில் ஏற்கெனவே,மின்வாரியத்துக்கு ரூ.10 கோடி பாக்கி, ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.40கோடி பாக்கி, நூலகத்துக்கு ரூ.10கோடிக்கும் மேல் பாக்கி உள்ளது. சமீபத்தில் பெய்த கடும் மழையால் தாம்பரத்தில் மாநகராட்சியில் 36 கிமீ வரை சாலைகள் பழுதடைந்துள்ளன. இதை தற்காலிகமாக சீரமைக்கவே நிதி இல்லை. எனவேரூ.7.5 கோடி அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது. அதேபோல் பல சாலைகள் நிரந்தரமாக சீரமைக்க ரூ.75கோடி தேவைப்படுகிறது. மாநகராட்சிக்கு தேவையான நிதியை அரசு உடனே ஒதுக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x