Last Updated : 10 Dec, 2021 05:43 PM

 

Published : 10 Dec 2021 05:43 PM
Last Updated : 10 Dec 2021 05:43 PM

சொத்தைப் பிரித்துத் தராத தாயைக் கொன்ற மகனின் தூக்கு தண்டனை ரத்து: ஆயுள் தண்டனை விதிப்பு 

சொத்தைப் பிரித்துத் தராத தாயைக் கொலை செய்த மகனுக்குக் கீழமை நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மறவன்பட்டியைச் சேர்ந்தவர் திலகராணி (45). இவருக்கு 5 மகன்கள் உள்ளனர். 2006-ல் போதையில் வந்து தகராறு செய்ததாகக் கணவரின் தலையில் கல்லைத் தூக்கிப்போட்டுக் கொலை செய்ததாக திலகராணியை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் திலகராணியை நீதிமன்றம் விடுதலை செய்தது.

பின்னர், கணவருக்குச் சொந்தமான வீட்டில் திலகராணி வசித்து வந்தார். அந்த வீடு மற்றும் சொத்துகளைப் பிரித்துத் தருமாறு அவரிடம் மகன்கள் தகராறு செய்து வந்தனர். அதற்கு திலகராணி மறுத்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 18.3.2018-ல் புதுக்கோட்டை செல்வதற்காக கறம்பக்குடி மறவன்பட்டி பிரதான சாலையில் கடைசி மகன் முத்து மற்றும் தாயார் லெட்சுமியுடன் பேருந்துக்காகக் காத்திருந்தார் திலகராணி. அப்போது அங்கு வந்த அவரது மூத்த மகன் ஆனந்த் (26) சொத்தைப் பிரித்துக் கொடுக்காத ஆத்திரத்தில் திலகராணியின் தலையைத் துண்டித்துக் கொலை செய்தார். பின்னர் கறம்பக்குடி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இந்த வழக்கு புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. விசாரணை முடிந்த நிலையில் ஆனந்துக்குத் தூக்கு தண்டனை விதித்து 1.10.2021-ல் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை நிறைவேற்ற அனுமதி கோரி மலையூர் காவல் ஆய்வாளரும், தீர்ப்பை ரத்து செய்யக்கோரி ஆனந்தும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஜி.ஜெயச்சந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஆனந்த் தரப்பில் வழக்கறிஞர் பி.கணபதி சுப்பிரமணியன் வாதிட்டார்.

பின்னர் நீதிபதிகள், ”ஆனந்தின் வயது, சமூகப் பின்னணி, குடும்பப் பொறுப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கீழமை நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது” என்று உத்தரவில் கூறியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x