Published : 10 Dec 2021 02:51 PM
Last Updated : 10 Dec 2021 02:51 PM

முதுகுளத்தூர் இளைஞர் மரணத்தில் நீதி விசாரணை தேவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

முதுகுளத்தூரைச் சேர்ந்த இளைஞர் மணிகண்டன் மரணத்திற்கு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், ”ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா, நீர்கோழியந்தல் கிராமத்தில் வசிக்கும் மணிகண்டன் மற்றும் அவரது இரு நண்பர்களை கடந்த 4.12.2021 அன்று மாலை முதுகுளத்தூர் தாலுகா கீழத்தூவல் காவல்துறையினர் மறித்துள்ளனர்.

மற்ற இருவரும் காவல்துறையினருக்கு பயந்து தப்பி சென்று விட மணிகண்டனை பிடித்த காவல்துறை அங்கேயே கடுமையாகத் தாக்கியதோடு, மேல் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அங்கும் கடுமையாக தாக்கியுள்ளதோடு, கஞ்சா வைத்திருந்தார்கள் எனும் போலியான ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டிருக்கிறது.

அன்று இரவு 7.30 மணியளவில் கீழத்தூவல் காவல்நிலையத்திலிருந்து மணிகண்டனை அவரது அம்மாவும், உறவினரும் அழைத்து வந்துள்ள நிலையில், 5.12.2021 அன்று அதிகாலை 3.30 மணியளவில் மணிகண்டன் ரத்த வாந்தி எடுத்து இறந்துள்ளார். முதல் நாள் காவல்துறையினர் அழைத்துச் செல்கிற போது மிகவும் ஆரோக்கியமான உடல்நிலையுடன் சென்ற மணிகண்டன் திடீரென ரத்த வாந்தி எடுத்து இறந்து போன சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இது குறித்து மணிகண்டனின் பெற்றோர் கேட்டபோது, அவருக்கு முறையான விளக்கத்தை அளிக்காமல் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மணிகண்டனின் இறப்பு தற்கொலையாகவோ, பாம்பு கடித்ததாலோ தான் சம்பவித்திருக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.

மேலும், காவல் நிலையத்தில் எந்தவித அத்துமீறல்களும் நடக்கவில்லை என காவல்துறை ஊடகங்களில் தன்னிச்சையாக வெளியிட்ட செய்திகளும் வலுவான சந்தேகத்தை எழுப்புகிறது.

பொது இடத்திலும், காவல் நிலையத்திலும் நடத்தப்பட்ட மோசமான தாக்குதலால்தான் மணிகண்டன் உயிரிழந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதால், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை குற்றத்திற்கான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை சிறையில் அடைக்க வேண்டுமெனவும், உயிரிழந்த மணிகண்டனின் குடும்பத்திற்கு உரிய நிவாரண உதவி வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

மேலும், தமிழகத்தில் இத்தகைய தன்மையில் தொடரும் மோசமான காவல் நிலைய குற்றங்களையும், அத்துமீறல்களையும் தடுத்து நிறுத்திட உடனடியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x