Published : 09 Dec 2021 12:07 PM
Last Updated : 09 Dec 2021 12:07 PM

முப்படைத் தளபதி பிபின் ராவத் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

பிபின் ராவத் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்.

குன்னூர்

ஹெலிகாப்டர் விபத்தில் பலியான முப்படைத் தளபதி பிபின் ராவத் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நடைபெற்ற விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து நேரில் கேட்டறிய சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 7 மணியளவில் கோவை விமான நிலையம் வந்தார். அங்கிருந்து, சாலை மார்க்கமாக வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கல்லூரி வளாகத்துக்கு 9 மணியளவில் முதல்வர் சென்றடைந்தார்.

இரவு குன்னூரில் தங்கிய முதல்வர், இன்று (9-ம் தேதி) காலை 8 முதல் 10 மணிக்குள் எம்.ஆர்.சி பேரக்ஸ் இடத்துக்கு வந்து பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

முதல்வரைத் தொடர்ந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, கா.ராமச்சந்திரன், மு.பெ.சாமிநாதன், ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே, விமானப் படை தலைமை அதிகாரி வி.ஆர்.சவுத்திரி, கப்பற்படை தலைமை அதிகாரி அட்மிரல் ஹரிகுமார், தலைமைச் செயலர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, ஆட்சியர் எஸ்.பி.அம்ரித், முப்படைகளின் அதிகாரிகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதியான பிபின் ராவத், ராணுவத்தில் பலகட்டப் பொறுப்புகளை வகித்தவர். பாகிஸ்தான், மியான்மர் நாடுகளில் இந்திய ராணுவம் நடத்திய துல்லியத் தாக்குதல்களை மேற்பார்வையிட்ட பெருமைக்குரியவர் பிபின் ராவத் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x