Last Updated : 08 Dec, 2021 07:45 PM

 

Published : 08 Dec 2021 07:45 PM
Last Updated : 08 Dec 2021 07:45 PM

போலீஸ் விசாரணையில் மர்ம மரணமடைந்த முதுகுளத்தூர் மாணவரின் உடல் மறு உடற்கூராய்வு 

முதுகுளத்தூரில் போலீஸ் விசாரணைக்குபின் மர்மமான முறையில் உயிரிழந்த கல்லூரி மாணவரின் உடல் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மறு உடற்கூராய்வு செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே நீர்கோழியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி லட்சுமணக்குமார் மகன் மணிகண்டன்(21). இவர் கமுதி முத்துராமலிங்கத்தேவர் நினைவுக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் கடந்த 4-ம் தேதி மாலை தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, கீழத்தூவல் காவல்நிலையம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸார் வாகனத்தை நிறுத்தச் சொல்லியும் மணிகண்டன் நிற்காமல் சென்றதால் விரட்டிப்பிடித்தனர்.

அப்போது அவரது நண்பர் சஞ்சய் அங்கிருந்து தப்பிச்சென்றார். போலீஸார் மணிகண்டனை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர் மாலையில் மாணவரின் தாயார் ராமலெட்சுமியை வரவழைத்து மணிகண்டனை வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் அன்றிரவு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அதிகாலை மணிகண்டன் உயிரிழந்தார். அதனையடுத்து 5-ம் தேதி மாலை மணிகண்டனின் உடல் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. ஆனால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீஸார் தாக்கியதால் தான் மணிகண்டன் உயிரிழந்தார் என உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதனைத்தொடர்ந்து மணிகண்டனின் தாய் உயர்நீதிமன்ற கிளையில் போலீஸார் தாக்கியதில் தான் மகன் இறந்தார் எனவும், அவரது உடலை மறு உடற்கூராய்வு செய்ய வேண்டும் எனவும் மனு தாக்கல் செய்தார்.

நேற்று முன்தினம் மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மணிகண்டனின் உடலை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மறு உடற்கூராய்வு செய்ய வேண்டும். அதை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். அவரது உடல் அடக்கம் செய்ய கொண்டு செல்லும் வரை போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மறு உடற்கூராய்வு

உயர் நீதிமன்ற கிளை உத்தரவின்படி நேற்று காலை 10 மணி முதல் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள், வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் தயார் நிலையில் இருந்தனர். மணிகண்டனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்ததும் உடற்கூராய்விற்கு தயாராகினர்.

அப்போது உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் தினேஷ், அழகுமலை, அசோக்ராஜா, ராஜகுரு, ஆறுமுகம் ஆகியோர், நீதிமன்ற உத்தரவுப்படி அரசு மருத்துவர்களுடன் இறந்த மணிகண்டன் தரப்பில் உறவினர் ஒருவராக கடலாடியைச் சேர்ந்த மருத்துவர் ராம்குமார், மருத்துவர் ஒருவராக பாஜகவைச் சேர்ந்த மதுரை மருத்துவர் சரவணன் ஆகியோரை, உடற்கூராய்வின்போது உள்ளே அனுமதிக்க வேண்டும் என கோரினர். ஆனால் ஆர்டிஓக்கள் சேக் மன்சூர் (ராமநாதபுரம்), முருகன்(பரமக்குடி) ஆகியோர் உயர்நீதிமன்ற உத்தரவில் அப்படி தெரிவிக்கவில்லை என மறுப்பு தெரிவத்தனர்.

இதனால் மதியம் 1 மணி வரை மறு உடற்கூராய்வு காலதாமதமானது. அப்போது அதிகாரிகள், வழக்கறிஞர்கள், சமுதாய அமைப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின்னர் அதிகாரிகள், வழக்கறிஞர்கள் பேச்சுவார்த்தை நடத்தி ராமநாதபுரம் ஆட்சியர் சங்கர் லால் அனுமதியின்படி மதுரை மருத்துவர் சரவணனை உடற்கூராய்வின்போது அனுமதித்தனர்.

அதனையடுத்து பகல் 1.20 மணிக்கு உடற்கூராய்வு அறைக்குள் அரசு மருத்துவக் கல்லூரி தடய அறிவியல் மருத்துவத்துறை மருத்துவர்கள் முத்து முனீஸ்வரன், சக்திவேல், பரமக்குடி ஆர்டிஓ முருகன், மருத்துவர் சரவணன், மணிகண்டனின் தாய் ராமலெட்சுமி, உறவினர் ஒருவர் சென்றனர். உடலை அனைவரும் பார்த்தபின் உடல் அமரர் ஊர்தியில் எடுத்துச் செல்லப்பட்டு தலை முதல் கால் வரை எக்ஸ்-ரே எடுக்கப்பட்டது.

அதனையடுத்து மாலை 4 மணிக்கு மேல் மறு உடற்கூராய்வு பரமக்குடி ஆர்டிஓ முன்னிலையில் தடய அறிவியல் மருத்துவத்துறை மருத்துவர்கள் முத்து முனீஸ்வரன், சக்திவேல் ஆகியோர் மூலம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. உடற்கூராய்வின்போது மதுரை மருத்துவர் சரவணனும் பங்கேற்றார். கூடுதல் எஸ்பி ஜெய்சிங் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மறு உடற்கூராய்வு முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x