Published : 08 Dec 2021 07:46 PM
Last Updated : 08 Dec 2021 07:46 PM

மாணவர் மணிகண்டன் மரணம்; ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை: விஜயகாந்த் வேண்டுகோள்

மாணவர் மணிகண்டன் மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு குழுவை அமைக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

முதுகுளத்தூர் அருகே நீர்கோழியேந்தலைச் சேர்ந்த லட்சுமணக்குமார் மகன் மணிகண்டன் (21). கல்லூரி மாணவரான இவர், டிசம்பர் 4-ம் தேதி மாலை பரமக்குடி - கீழத்தூவல் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்ட கீழத்தூவல் போலீஸார் மணிகண்டனின் வாகனத்தை நிறுத்த முயன்றனர். ஆனால் மணிகண்டன் நிற்காமல் சென்றதால், விரட்டிச் சென்று பிடித்தனர். காவல் நிலையத்துக்கு அவரை அழைத்துச் சென்று விசாரித்தனர்.

பின்னர் தாயாரை வரவழைத்து மணிகண்டனை அனுப்பி வைத்தனர். வீட்டில் நள்ளிரவில் மணிகண்டனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதனையடுத்து முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில் மணிகண்டனின் உறவினர்கள், கிராமத்தினர் போலீஸார் தாக்கியதில்தான் மணிகண்டன் இறந்தார் எனக் கூறி, முதுகுளத்தூர் - பரமக்குடி சாலையில் அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் முதுகுளத்தூர் டிஎஸ்பி ஜான்பிரிட்டோ, குற்றப் பிரிவு டிஎஸ்பி திருமலை ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரேதப் பரிசோதனை முடிவடைந்த பின்பு தகுந்த நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கல்லூரி மாணவர் மணிகண்டன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு குழுவை அமைக்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் காவல் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் நிற்காமல் சென்ற கல்லூரி மாணவர் மணிகண்டனை விரட்டி பிடித்த போலீசார், விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட மணிகண்டன் நடக்கக் கூட முடியாத நிலையில் பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றனர். வீட்டில் 3 முறை ரத்த வாந்தி எடுத்த மணிகண்டன், காலை இறந்த நிலையில் படுக்கையில் கிடந்துள்ளார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.

காவல் நிலையத்தில் வைத்து போலீசார் அடித்ததாலேயே மணிகண்டன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது கடும் கண்டனத்துக்குரியது. மேலும் மாணவர் மர்ணத்தில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது.

எனவே, மாணவர் மரணத்தில் புதைந்துள்ள மர்மத்தை வெளிக்கொண்டு வர ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு குழுவை அமைக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி, மணிகண்டன் மரணத்துக்கு நீதி கிடைக்க தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும். மாணவர் மணிகண்டனின் உடலை மறு உடற்கூராய்வு செய்ய வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவை தேசிய முற்போக்கு திராவிட கழகம் வரவேற்கிறது.

இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x