Published : 08 Dec 2021 02:47 PM
Last Updated : 08 Dec 2021 02:47 PM

கரோனா; உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு தலா ரூ.50,000 நிவாரண நிதி: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50,000 நிவாரண நிதியை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பில், “ முதல்வர் ஸ்டாலின் இன்று (8.12.2021) தலைமைச் செயலகத்தில், கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கும் வகையில், சென்னை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்த 10 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50,000/- நிவாரண நிதிக்கான காசோலைகளை வழங்கினார்.

கரோனா நோய்த் தொற்று காரணமாக மார்ச் 2020 முதல் நாளது தேதி வரை 27,31,945 நபர்கள் பாதிக்கப்பட்டு, 26,87,414 நபர்கள் குணமடைந்துள்ளனர், 36,549 நபர்கள் கரோனா நோயின் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர்.

கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு துறைகளுக்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு, ஊரடங்கு காரணமாக பாதிப்பிற்குள்ளான பொது மக்களின் துயர் துடைக்கும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், முகாம்வாழ் இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கும், குடும்பம் ஒன்றுக்கு ரூ.4,000/- வீதம் தமிழ்நாடு அரசால் நிவாரணம் வழங்கப்பட்டது.

நடப்பு நிதியாண்டில் (2021-2022) கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாளது தேதி வரை ரூ.83,98.18 கோடி மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாடு அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த தொடர்ந்து ஆய்வுக்கூட்டம் நடத்தி அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள். இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சீரிய நோய்த் தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக 21.05.2021 அன்று 36,184-ஆக இருந்த நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 07.12.2021 அன்று 710 ஆக குறைந்துள்ளது.

தமிழ்நாடு அரசு கரோனா இரண்டாவது அலையினை கட்டுப்படுத்தவும், மூன்றாவது அலையினை வராமல் தடுக்கவும், பல்வேறு முனைப்பான முயற்சிகள் மேற்கொண்டதோடு பெருமளவில் தடுப்பூசி முகாம்கள் நடத்தி தமிழ்நாட்டில் சுமார் 7 கோடி தடுப்பூசிகள் செலுத்தியுள்ள காரணத்தால் கரோனா நோய் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது அண்டை மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கரோனா – ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தவும் தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பணியில் இருந்த போது கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முன்களப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கப்படுகிறது. தற்போது கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களது குடும்பங்களின் துயர் துடைக்கும் வகையில் நாளது தேதிவரை கரோனா நோய்த் தொற்றின் காரணமாக உயிரிழந்த நபர்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.50,000/- என மொத்தம் ரூ.182.74 கோடி நிவாரணத் தொகை வழங்க தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

இனி வரும் காலங்களில் கரோனா நோய்த் தொற்றால் உயிரிழக்கும் நபர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.50,000/- நிவாரணமாக வழங்கப்படும்.

கரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்துள்ள நபர்களது குடும்பத்தினர் கரோனா நோய்த் தொற்றினால் இறந்ததற்கான இறப்பு சான்று வைத்திருப்பின் https://www.tn.gov.in இணையவழியாகவும், அருகில் இருக்கும் இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். கரோனாவால் உயிரிழந்த நபர்களது குடும்பங்களுக்கு நிவாரணம் கோரி வரப்பெறும் விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலித்து நிவாரணம் வழங்கும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. கரோனா நிவாரணம் கோரி வரப்பெறும் விண்ணங்களை பரிசீலனை செய்து தகுதியுள்ள இனங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ இவ்வாறு தெரிவித்துள்ளது.

.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x