Published : 08 Dec 2021 11:32 AM
Last Updated : 08 Dec 2021 11:32 AM

மாணவர் மணிகண்டன் மர்ம மரணம்; வெளிப்படையான விசாரணை மூலம் நீதியை நிலைநாட்ட வேண்டும்: கமல்

மாணவர் மணிகண்டன் மர்ம மரணம் தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனத் தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

முதுகுளத்தூர் அருகே நீர்கோழியேந்தலைச் சேர்ந்த லட்சுமணக்குமார் மகன் மணிகண்டன் (21). கல்லூரி மாணவரான இவர், டிசம்பர் 4-ம் தேதி மாலை பரமக்குடி - கீழத்தூவல் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்ட கீழத்தூவல் போலீஸார் மணிகண்டனின் வாகனத்தை நிறுத்த முயன்றனர். ஆனால் மணிகண்டன் நிற்காமல் சென்றதால், விரட்டிச் சென்று பிடித்தனர். காவல் நிலையத்துக்கு அவரை அழைத்துச் சென்று விசாரித்தனர்.

பின்னர் தாயாரை வரவழைத்து மணிகண்டனை அனுப்பி வைத்தனர். வீட்டில் நள்ளிரவில் மணிகண்டனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதனையடுத்து முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில் மணிகண்டனின் உறவினர்கள், கிராமத்தினர் போலீஸார் தாக்கியதில்தான் மணிகண்டன் இறந்தார் எனக் கூறி, முதுகுளத்தூர் - பரமக்குடி சாலையில் அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் முதுகுளத்தூர் டிஎஸ்பி ஜான்பிரிட்டோ, குற்றப் பிரிவு டிஎஸ்பி திருமலை ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரேதப் பரிசோதனை முடிவடைந்த பின்பு தகுந்த நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இதுகுறித்து கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

"முதுகுளத்தூர் அருகே நீர்க்கோழிந்தல் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் மணிகண்டனின் மர்ம மரணத்தில் மறு உடற்கூராய்வு செய்ய வேண்டுமெனும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மக்கள் நீதி மய்யம் கட்சி வரவேற்கிறது.

மேலும், மாணவர் மரணம் தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்."

இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x