Last Updated : 08 Dec, 2021 09:55 AM

 

Published : 08 Dec 2021 09:55 AM
Last Updated : 08 Dec 2021 09:55 AM

பெண் காவலரின் படங்களை அவரது கணவருக்கு அனுப்பி மிரட்டல்: ஆண் காவலர் கைது

கோவை

கோவையில் பெண் காவலரின் புகைப்படங்களை அவரது கணவருக்கு அனுப்பி மிரட்டலில் ஈடுபட்ட, ஆண் காவலரை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்்ந்தவர் ஏழனைபாண்டி (27). இவர், நாங்குநேரி காவல் நிலையத்தில், இரண்டாம் நிலைக்காவலராக பணியாற்றி வருகிறார்.

கோவை மாவட்ட காவல்துறைக்குட்பட்ட காவல் நிலையத்தில், காவலராக ஒரு பெண் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி விட்டது. கடந்த 2018-ம் ஆண்டு காவலர் ஏழனைபாண்டியும், அந்த பெண் காவலரும் கோவை மாவட்ட ஆயுதப்படையில் ஒன்றாக பணியாற்றி வந்தனர்.

அப்போது இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டு, காதலர்கள் போல் பழகி வந்துள்ளனர். இதற்கிடையே, கடந்த 2019-ம் ஆண்டு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த பெண் காவலர், ஏழனைபாண்டியுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.

இதையடுத்து சமீபத்திய மாதங்களாக காவலர் ஏழனைபாண்டி, சம்பந்தப்பட்ட பெண் காவலரை தொடர்பு கொண்டு பேச முயன்றார். ஆனால், சம்பந்தப்பட்ட பெண் காவலர் அவருடன் பேசவில்லை. இதனால் ஆத்திரமடைந்த காவலர் ஏழனைபாண்டி, சம்பந்தப்பட்ட பெண் காவலருடன் பழக்கம் இருந்த போது, எடுத்த புகைப்படங்களை வைத்து, அவரை மிரட்டியுள்ளார். மேலும், அந்த பெண் காவலரின் கணவருக்கு அந்த புகைப்படங்களை அனுப்பி மிரட்டியுள்ளார்.

இதையறிந்து அதிர்ச்சியடைந்த பெண் காவலர், மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சில தினங்களுக்கு முன்னர் புகார் அளித்தார். அதில்,‘‘ தனது புகைப்படங்களை கணவரிடம் காட்டி, மிரட்டும் காவலர் ஏழனைபாண்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ எனக் கூறப்பட்டு இருந்தது.

அதன் பேரில், சைபர் கிரைம் காவல்துறையினர், மானபங்கம், தகவல் தொழில்நுட்ப சாதனத்தை தவறாக பயன்படுத்துதல், பெண் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் ஏழனைபாண்டி மீது வழக்குப்பதிந்தனர். நாங்குநேரியில் இருந்த அவரை, சைபர் கிரைம் காவல்துறையினர் இன்று (நவ 07) கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x