Published : 08 Dec 2021 04:07 AM
Last Updated : 08 Dec 2021 04:07 AM
அணை பாதுகாப்பு சட்டத்தின் நன்மைகள் பற்றி மக்களிடம் பாஜகவினர் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பாஜக தொண்டர்களுக்கு அவர் நேற்று எழுதிய கடிதம்:
நாட்டில் உள்ள அனைத்து அணைகளுக்கும் ஒரே மாதிரியான பாதுகாப்பு வழிமுறைகளை முன்னெடுக்கவே அணை பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இச்சட்டம் குறித்த புரிதல் இல்லாமல் அரசியல் செய்வதற்காக திமுக, மதிமுக போன்ற கட்சிகள் இதை எதிர்க்கின்றன.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் அலட்சியத்தால் 34 ஆண்டுகள் கிடப்பில் இருந்த இந்த மசோதா இப்போது சட்டமாகியுள்ளது.
இந்திய தலைமை கணக்கு தணிக்கை அறிக்கையின்படி 2008 முதல் 2016 வரை 17 மாநிலங்களில் 2 மாநிலங்களில் மட்டுமே அணைகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வுநடத்தப்பட்டுள்ளது. இந்த சட்டம்மூலம் இனி ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில அணை பாதுகாப்பு ஆணையம், மாநில அணை பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றை உருவாக்குவது கட்டாயமாக்கப்படும்.
அணை பாதுகாப்பு சட்ட வரைவை தமிழகம், கேரளா தவிரமற்ற மாநிலங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. தங்கள் மாநிலத்தில் ஏற்கெனவே அணை பாதுகாப்பு சட்டம் இருப்பதாகக் கூறி கேரளாவும், அணையின் உரிமை, கூட்டாட்சித் தத்துவத்தை முன்னிறுத்தி தமிழகமும் இச்சட்டத்தை எதிர்த்தன. ஆனால், மாநில அரசுகளால் நியமிக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்ட தேசிய அணை பாதுகாப்பு குழு நாடு முழுவதும் உள்ள அணைகளின் பாதுகாப்புக்காக ஒரே மாதிரியான வழிகாட்டுதல்களை வழங்கசட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இக்குழுவின் 10 உறுப்பினர்களில் 7 பேர் மாநில அரசுகளால் நியமிக்கப்படுபவர்களாக இருப்பார்கள். இச்சட்டம் அணைகள் பராமரிப்பில் மாநிலங்களின்பங்களிப்பையும், பொறுப்புணர்வையும் அதிகரிக்கிறது.
எனவே, அணை பாதுகாப்பு சட்டத்தின் நன்மைகள் பற்றியும், மத்திய அரசின் திட்டங்கள் பற்றியும்பாஜகவினர் மக்களிடம் தொடர்ந்து பிரச்சாரம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT