Published : 07 Dec 2021 03:07 AM
Last Updated : 07 Dec 2021 03:07 AM

தனியார் பள்ளியில் பெண் முதல்வர் தற்கொலை: பள்ளித் தாளாளர் மீது வழக்குப் பதிவு

நன்னிலம் அருகே தனியார் பள்ளி பெண் முதல்வர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், பள்ளித் தாளாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் மருதுவாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் மகள் சத்யா(36). இவர், பேரளத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் முதல்வராக பணியாற்றி வந்தார். திருமணமாகி விவாகரத்து பெற்ற இவருக்கு, 13 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், கடந்த 4-ம் தேதி பள்ளிக்குச் சென்ற சத்யா, அவரது அறையில் மயங்கிக் கிடந்தார்.

தந்தை புகார்

இதைக் கண்ட ஆசிரியர்கள் சத்யாவை மீட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிர்இழந்தார். தொடர்ந்து, பிரேதபரிசோதனைக்குப் பின்னர்சத்யாவின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுதொடர்பாக, சந்தேக மரணம் என பேரளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், சத்யாவை தற்கொலைக்குத் தூண்டியதாக பள்ளித் தாளாளர் வெற்றிச் செல்வன் மீது சத்யாவின் தந்தை கணேசன் போலீஸில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, சந்தேக மரணம் என்பதை மாற்றி சத்யாவை தற்கொலைக்குத் தூண்டியதாக பள்ளித் தாளாளர் வெற்றிச்செல்வன் மீது போலீஸார் நேற்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x