Published : 23 Mar 2016 09:51 AM
Last Updated : 23 Mar 2016 09:51 AM

அதிமுகவிடம் 4 தொகுதிகளைப் பெற்று சொந்த சின்னத்தில் போட்டியிடுவோம்: பார்வர்ட் பிளாக் நம்பிக்கை

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய செயலாளர் ஜி.தேவராஜன், மாநில பொதுச் செயலாளர் பி.வி.கதிரவன் எம்எல்ஏ ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களை சந்தித்தனர். அப்போது பி.வி.கதிரவன் கூறியதாவது:

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவை ஆதரிப்பது என்று முடிவெடுத்து, அது தொடர்பான கடிதத்தை அதிமுக தலைமையிடம் அளித்திருந்தோம். அதனடிப்படையில் எங்களை முதல்வர் ஜெயலலிதா அழைத்து பேசினார். அப்போது, எங்களுக்கு 4 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். இது தொடர்பாக அதிமுக தேர்தல் குழுவுடன் பேசுங்கள் என்று முதல்வர் கூறினார். ஏற்கெனவே போட்டியிட்ட உசிலம்பட்டி உட்பட 4 தொகுதிகளை கேட்பது என்றும், கட்சியின் சொந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளோம்.

புதுச்சேரியிலும் கட்சி வலுவாக உள்ள தால் அங்கு ஒரு இடத்தில் போட்டியிட விரும்புகிறோம். அதிமுக குழுவுடன் பேச எனது தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளோம். எங்களின் கோரிக்கை நிறைவேறும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு கதிரவன் கூறினார்.

தேசிய செயலாளர் ஜி.தேவராஜன் கூறும்போது, ‘‘கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் என நிறைய கட்சிகள் இருந்தன. ஆகவே, ஒரு தொகுதியில் போட்டியிட்டோம். இந்த முறை அதிமுக கூட்டணியில் உள்ள ஒரே தேசிய கட்சி அகில இந்திய பார்வர்ட் பிளாக் மட்டும்தான். எனவே, எங்களுக்கு 4 தொகுதிகளை அதிமுக ஒதுக்கும் என்று நம்புகிறோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x