Published : 06 Dec 2021 03:47 PM
Last Updated : 06 Dec 2021 03:47 PM

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை

கோப்புப் படம்

சென்னை

தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

"தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலை நிறுத்த மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருக்கும்போது இலங்கைக் கடற்படையினரின் தொடர் தாக்குதலால் மீனவர்களின் மீன்பிடித் தொழில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. இந்த நிலை மாறி தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் பாதுகாப்பாகத் தொடர வேண்டும். கடந்த பல வருடங்களாகத் தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையினரின் திடீர் தாக்குதலால் மீனவர்களுக்கு லட்சக்கணக்கில் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. வருவாய் கிடைப்பதில்லை. இதனால் மீனவர்களின் குடும்பங்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளன.

நேற்று முன் தினம் ராமேஸ்வரம் மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அப்பகுதிக்கு வந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதலில் ஈடுபட்டனர். மீனவர்கள் மீது கற்களையும், பாட்டில்களையும் வீசி அச்சுறுத்தி விரட்டியடித்தனர். இதனால் மீனவர்கள் பயந்த நிலையில் கரை திரும்பினர்.

இந்தத் தாக்குதலில் மீனவர்களின் மீன்பிடி சாதனங்கள் சேதமுற்றன. லட்சக்கணக்கான ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கைக் கடற்படையினரின் தொடர் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய அரசு, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மேலும் மத்திய அரசு, நம் நாட்டு மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்குப் பாதுகாப்பு கொடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை இன்னும் துரிதப்படுத்த வேண்டும்.

மத்திய அரசு, தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலைக் கண்டிப்பதோடு, மீனவர்களின் தொடர் வாழ்வாதாரத்துக்குப் பாதுகாப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்."

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x