Last Updated : 06 Dec, 2021 02:42 PM

 

Published : 06 Dec 2021 02:42 PM
Last Updated : 06 Dec 2021 02:42 PM

புதுவையில் தகுதியுடைய அனைவருக்கும் சிவப்பு நிற ரேஷன் அட்டை: அமைச்சர் சாய் ஜெ.சரவணன் குமார் தகவல்

காரைக்காலில் நடைபெற்ற ரேஷன் அட்டை தொடர்பான முகாமில் பயனாளி ஒருவருக்கு விண்ணப்பப் படிவத்தை வழங்கிய அமைச்சர் ஏ.கே.சாய் ஜெ.சரவணன் குமார்.

 காரைக்கால்

தகுதியுடைய அனைவருக்கும் சிவப்பு நிற ரேஷன் அட்டை வழங்கப்படும் எனப் புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஏ.கே.சாய் ஜெ.சரவணன் குமார் கூறியுள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் சிவப்பு நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் வசதி படைத்த பலரும் சிவப்பு ரேஷன் அட்டை பெற்றுள்ளதோடு, ஏழ்மை நிலையில் உள்ள பலருக்கும் மஞ்சள் நிற ரேஷன் அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ஏழ்மை நிலையில் உள்ள ஏராளமானோர் அரசின் உதவிகளைப் பெற முடியாமல் சிரமப்பட்டு வருவதாகவும் பல்வேறு தரப்பினராலும் தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.

மேலும் அரசியல் பலம் கொண்டவர்களின் ஆதரவோடு வசதி படைத்தோர் பலர் சிவப்பு நிற ரேஷன் அட்டை பெற்றுள்ளனர் என்றும், இந்தக் குளறுபடிகளுக்கு அரசுத் தரப்பே காரணம் என்றும், அதனால் சிறப்பு முகாம்கள் நடத்தி குறைகளைக் களைந்து தகுதியுடைய ஏழை மக்கள் அனைவருக்கும் சிவப்பு நிற ரேஷன் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் குடிமைப் பொருள் வழங்கல் துறை சார்பில், காரைக்கால் வடக்குத் தொகுதிக்குட்பட்ட கோயில்பத்து அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் ரேஷன் அட்டை தொடர்பான 2 நாட்கள் நடைபெறும் சிறப்பு முகாம் இன்று (டிச.6) தொடங்கப்பட்டது.

இதில் புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஏ.கே.சாய் ஜெ.சரவணன் குமார் கலந்துகொண்டு முகாமைத் தொடங்கி வைத்துப் பேசும்போது, “இந்த முகாமைப் பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாநிலத்தில் மக்கள்தொகை அதிகரித்துள்ள நிலையில், பலரும் சிவப்பு நிற ரேஷன் அட்டை வேண்டும் எனக் கோருவதால், 50 ஆயிரம் ரேஷன் அட்டைகளை அதிகப்படுத்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமரிடமும், புதுச்சேரி முதல்வரிடமும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். எனவே தகுதியுடைய அனைவருக்கும் சிவப்பு நிற ரேஷன் அட்டை வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.என்.திருமுருகன், மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா, துணை ஆட்சியர்கள் எம்.ஆதர்ஷ், எஸ்.பாஸ்கரன், குடிமைப்பொருள் வழங்கல் துறை துணை இயக்குநர் எஸ்.சுபாஷ் உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இம்முகாமில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் போன்ற பணிகளும் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x