தஞ்சையில் சோகம்: கடன் பிரச்சினையால் மகனை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

தஞ்சையில் கடன் பிரச்சினையால் மகனை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் அருகே மேலவெளி ஊராட்சிக்கு உள்பட்ட மனோ நகரைச் சேர்ந்தவர் ராஜா (38). ரியல் எஸ்டேட் வணிகம் மேற்கொண்டு வந்த இவர், திருவையாறில் தேனீர் விடுதியையும் நடத்தி வந்தார். இவரது மனைவி கனகதுர்கா (32). மகன் ஸ்ரீவத்சன் (11) தனியார் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் புதுக்கோட்டையில் வசிக்கும் ராஜாவின் சகோதரர் வினோத்துக்கு வாட்ஸ் அப்பில் வந்த குரல் பதிவு தகவலில் கடன் சுமை காரணமாக தற்கொலை செய்துகொள்வதாக ராஜா கூறியுள்ளார். இது குறித்து காவல் துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கள்ளப்பெரம்பூர் காவல் நிலையத்தினர் நிகழ்விடத்துக்குச் சென்று சடலங்களைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். ராஜாவுக்கு ரியல் எஸ்டேட் வணிகத்தில் கடன் சுமை அதிகரித்ததால், தான் குடியிருக்கும் சொந்த வீட்டை மற்றொவருக்கு விற்றுள்ளார். ஆனால் வீட்டு மீதான வங்கிக் கடன் நிலுவையில் உள்ளதால், விற்பனை செய்த பணம் ராஜாவுக்கு வந்து சேரவில்லை. இதனிடையே கடன் நெருக்கடி அதிகரித்ததால், ராஜா தனது மகனைக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு தன் மனைவியுடன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

மேலும், இது தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in