Last Updated : 06 Dec, 2021 03:07 AM

 

Published : 06 Dec 2021 03:07 AM
Last Updated : 06 Dec 2021 03:07 AM

ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸ் போட்டியின்றி தேர்வாகின்றனர்: பொன்விழா ஆண்டில் இரட்டைத் தலைமையை உறுதி செய்த அதிமுக

வேட்புமனு தாக்கலின்போது எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப் படங்களுக்கு மரியாதை செலுத்திய ஓபிஎஸ், இபிஎஸ்.

சென்னை

அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும் போட்டியின்றி தேர்வாகின்றனர். இதன்மூலம் பொன்விழா ஆண்டில் இரட்டைத் தலைமையை அதிமுக உறுதி செய்துள்ளது.

தமிழ் திரையுலகில் பெரும் மக்கள் செல்வாக்குடன் இருந்த எம்ஜிஆர், திமுகவில் இணைந்து முக்கியத் தலைவராக விளங்கினார். அண்ணா மறைவுக்கு பிறகு திமுக தலைவராகவும், முதல்வராகவும் பொறுப்பேற்ற கருணாநிதிக்கும், எம்ஜிஆருக்கும் கருத்து வேறுபாடுகள் எழவே, கட்சியில் இருந்து எம்ஜிஆர் நீக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து 1972 அக்.17-ம் தேதி அதிமுக என்ற தனி கட்சியை தொடங்கினார் எம்ஜிஆர். 1973-ல் திண்டுக்கல் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்ட அதிமுக வென்று, ஆளும் திமுகவுக்கு வலுவான மாற்று சக்தி என்பதை பதிவு செய்தது. 1977 சட்டப்பேரவை தேர்தலில் வென்று முதல்வராக பதவியேற்ற எம்ஜிஆர், 1987 டிச.24-ம் தேதி, தான் மறையும் வரை அப்பதவியில் இருந்தார்.

ஆரம்ப காலத்தில் அதிமுக பொதுச் செயலாளராக இருந்த எம்ஜிஆர், முதல்வரானதும் பொதுச்செயலாளர் பதவியை ப.உ.சண்முகம், நெடுஞ்செழியன், ராகவானந்தம் ஆகியோருக்கு அடுத்தடுத்து வழங்கினார். மறைவதற்கு சில காலம் முன்பு அதிமுக பொதுச் செயலாளர் பொறுப்பை எம்ஜிஆரேஏற்றார். எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் பெரும்பாலும் கட்சியும், ஆட்சியும் இரு வேறு தலைவர்களிடமே இருந்தது. கட்சித் தலைமை வேறொருவரிடம் இருந்தாலும் எம்ஜிஆரை மீறி எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலையே இருந்தது.

எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று பிளவுபட்டு 1989 தேர்தலில் போட்டியிட்டனர். இத்தேர்தல்முடிவுகளுக்கு பிறகு எதிர்க்கட்சி தலைவரான ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஒருங்கிணைந்தது.

அதிமுக பொதுச் செயலாளராக ஜெயலலிதா தேர்வானார். 1991 பேரவைத் தேர்தலில் வென்று முதல்வரான ஜெயலலிதா, 2016 டிச.5-ம்தேதி மறையும் வரை இடையிடையே தேர்தல் தோல்விகள், பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறைவாசம் என பல்வேறு நெருக்கடிகளை சந்தித்தபோதும், அதிமுகவின் பொதுச் செயலாளராக, ஒற்றைத் தலைவராக திகழ்ந்தார்.

ஜெயலலிதா சிறை சென்றபோது2 முறை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு, ஜெயலலிதா மறைந்ததும் முதல்வர் பதவி கிடைத்தது. ஆனால், கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். சில வாரங்களிலேயே சசிகலா முதல்வராக தேர்வு செய்யப்பட, அவருக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி உயர்த்தினார். முதல்வராக பதவியேற்க ஆளுநரின் அழைப்புக்காக காத்திருந்த சசிகலா, சொத்து வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். பழனிசாமி முதல்வர் ஆனார். ஓபிஎஸ் தலைமையில் தனி அணி செயல்பட்டதால் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. 2017 ஆகஸ்ட்டில் பழனிசாமி, ஓபிஎஸ் அணிகள் இணைந்தன. அதன்பிறகு அதிமுக பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டு முதல்முறையாக இரட்டைத் தலைமையில் கட்சிஇயங்கியது. இரட்டை இலை சின்னமும் மீண்டும் கிடைத்தது.

இந்நிலையில், கடந்த 1-ம் தேதிநடைபெற்ற அதிமுக செயற்குழுவில், ‘பொதுச் செயலாளர் பதவிக்குபதிலாக இனி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இருக்கும். பொதுச் செயலாளரை போல இப்பதவிகளுக்கும் அதிமுக தொண்டர்கள் நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுப்பார்கள். டிச.7-ம் தேதி தேர்தல் நடக்கும்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓபிஎஸ்ஸும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு பழனிசாமியும் 4-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்களது வெற்றியும் உறுதியாகிவிட்டது.

பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள அதிமுகவின் அதிகாரம் மிக்க இரட்டைத் தலைவர்களாக ஓபிஎஸ் - இபிஎஸ் தேர்வாகின்றனர். தமிழகத்தை அதிக ஆண்டுகள், அதாவது 30ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சியாக, இப்போதும் 65 எம்எல்ஏக்களுடன் வலுவான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக, இரட்டைத் தலைமையை உறுதி செய்திருக்கிறது.

நாட்டில் எந்த கட்சியிலும் இரட்டைத் தலைமை இல்லாத நிலையில் அதிமுகவின் இந்த மாற்றம், தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்திய அரசியலிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஆட்சியில்இருந்தபோது ஓபிஎஸ் - இபிஎஸ்இரட்டைத் தலைமை வெற்றிகரமாகசெயல்பட்டது. எதிர்க்கட்சியாக இருக்கும் நிலையில் ஆளும் திமுகவையும், சசிகலா - டிடிவி தினகரனையும் எதிர்கொண்டு இனி அவர்கள்எவ்வாறு செயல்பட உள்ளனர் என்பதை பொருத்தே அதிமுகவின் எதிர்காலம் அமையும்!

இன்று முடிவு அறிவிப்பு

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு ஓபிஎஸ் - இபிஎஸ் தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அதனால், இவர்கள் இருவரும் தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகதலைமை அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகளான பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வேட்புமனுக்களை நேற்று பரிசீலனை செய்தனர். ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தலைமை அலுவலகத்துக்கு வரவில்லை. வேட்புமனுக்களை திரும்ப பெற இன்று மாலை 4 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதால், அதன் பிறகு முடிவு அறிவிக்கப்படும் என்று பொன்னையன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x