Published : 06 Dec 2021 03:07 AM
Last Updated : 06 Dec 2021 03:07 AM
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வள்ளிநாயகபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.2.62 கோடிமோசடி செய்ததாக, அந்த சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளரை போலீஸார் கைது செய்தனர்.
ஓட்டப்பிடாரம் அருகே வள்ளிநாயகபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் கே.சண்முகபுரம் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் தலைவராக சுப்புராஜ், செயலாளராக வேல்முருகன் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். சங்கத்தில் நகைக்கடன் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக கோவில்பட்டி கூட்டுறவு சங்க துணைப் பதிவாளருக்கு புகார்கள் வந்தன.
அதன் அடிப்படையில் கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் விசாரணை மேற்கொண்டதில், ரூ.2.62கோடி மதிப்புக்கு போலி நகைகளைஅடகு வைத்தும், நகையை திருப்பிய பணத்தை சங்கத்தில் செலுத்தாமலும், சங்கத்தில் உள்ள அடமான நகை இருப்பை குறைவாககாட்டியும் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் சுப்புராஜ், செயலாளர் வேல்முருகன் உட்பட 9 பேர் மீது தூத்துக்குடி மாவட்ட வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. மாவட்ட வணிகவியல் குற்றப் புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர்பவுன் பத்திரகாளி விசாரணை நடத்தி சுப்புராஜ், வேல் முருகன்ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.
திருநெல்வேலி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வைகுண்டம் சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர். மோசடிக்கு உடந்தையாக இருந்த மேலும் 7 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT