Published : 06 Dec 2021 03:07 AM
Last Updated : 06 Dec 2021 03:07 AM
முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரள அமைப்புகளின் பொய்ப் பிரச்சாரத்தைக் கண்டித்து தமிழக-கேரள எல்லையான லோயர் கேம்ப்பில் 5 மாவட்ட விவசாயிகள் மறியல் செய்தனர், இதனால் 2 மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
முல்லை பெரியாறு அணையை அகற்ற வேண்டும். அதற்கு மாற்றாகப் புதிய அணை கட்ட வேண்டும் என வலியுறுத்தி கேரளாவில் பல்வேறு கட்சியினர், அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது.
இது போன்ற செயல்களைத் தடுத்து நிறுத்தக் கோரி 5 மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக-கேரள எல்லையில் நேற்று மறியல் நடந்தது. லோயர்கேம்ப்பில் இருந்து குமுளிக்குப் பேரணியாகச் செல்ல முயன்ற விவசாயிகளை உத்தமபாளையம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயாகுப்தா தலைமையிலான போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதைத் தொடர்ந்து லோயர்கேம்ப் பென்னிகுவிக் மண்டபம் அருகே விவசாயிகள் சாலை மறியல் செய்தனர்.
உத்தமபாளையம் வட்டாட்சியர் அர்ஜுனன், துணை வட்டாட்சியர் சுருளி ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கேரளாவில் பெரியாறு அணைக்கு எதிராக விஷமப் பிரச்சாரம் நடக்கிறது. இதுபோன்ற செயலில் ஈடுபடுவோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். பேபி அணையைப் பலப்படுத்துவதற்கு ஏதுவாக அங்குள்ள மரங்களை அகற்ற அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
சமாதானம் செய்த அதிகாரிகள்
தேனி மாவட்ட ஆட்சியர் மூலமாக அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாக அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர். போராட்டத்துக்கு 5 மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் எஸ். ராஜசேகர் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் செ.நல்லுசாமி, 5 மாவட்ட விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பொன்.காட்சிகண்ணன், முதன்மைச் செயலாளர் சலேத்துராஜ், ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாயிகளின் போராட்டத்தால் தமிழக-கேரள எல்லையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT