

அழிந்துவரும் மண் வளத்தை மீட்டெடுக்க அனைத்து நாடுகளும் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உலக மண் தினத்தை முன்னிட்டு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நம் உடலுக்கு மூலமான உயிருள்ள இம்மண், முழு அழிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. இதனை மிகுந்த அவசரத்துடன் அணுகுவது, எல்லா தேசங்களும் நிறைவு செய்ய வேண்டிய மிக முக்கிய பொறுப்பாக இருக்கிறது. நாம் இதனை நிகழச்செய்வோம்” எனக் கூறியுள்ளார்.
மேலும், “கார்பன் வெளியீட்டை குறைப்பதில் மண் மிக முக்கிய பங்காற்றுகிறது. அத்துடன், அதிகப்படியான தண்ணீரை சேமிக்கும் திறனை பெற்றுள்ள மண், அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாகவும் விளங்குகிறது. 36 முதல் 39 இன்ச் வரை உள்ள மேல் மண்ணின் வளம் தான் பூமியில் உள்ள 87 சதவீத உயிர்களின் வாழ்வுக்கு மூலமாக உள்ளது. நம் உடல்கூட இந்த மண்ணால் ஆனதுதான். எனவே, மண் வளத்தை மேம்படுத்தாமல் நம் உடலும், மற்ற உயிர்களும் மேம்பட முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக ‘கான்சியஸ் பிளானட்’ என்னும் இயக்கத்தை சத்குரு விரைவில் தொடங்க இருக்கிறார்.