Published : 05 Mar 2016 10:08 AM
Last Updated : 05 Mar 2016 10:08 AM
தமிழக பாஜகவில் விருப்ப மனு தாக்கல் நேற்று தொடங்கியது.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து மார்ச் 4, 5 தேதிகளில் விருப்ப மனுக்கள் பெறப்படும் என்றும், இதற்கான படிவங்கள் www.bjptn.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று காலை 9 மணிக்கு விருப்ப மனு தாக்கல் தொடங்கியது. பூர்த்தி செய்யப்பட்ட மனுவுடன் பொதுத் தொகுதிக்கு ரூ. 5 ஆயிரம், தனித் தொகுதிகள், பெண்களுக்கு ரூ. 2 ஆயிரத்து 500 செலுத்த வேண் டும். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், துணைத் தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் விருப்ப மனுக்களைப் பெற்றனர்.
நாகர்கோவில், சிங்காநல்லூர், வேளச்சேரி தொகுதியில் போட்டியிட தமிழிசை, கோவை தெற்கு, மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட வானதி சீனிவாசன், தியாகராய நகர், காரைக்குடி, ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஆகியோருக்கு அவர்களது ஆதரவாளர்கள் விருப்ப மனுக்களை அளித்தனர். கோவை தெற்கு தொகுதி யில் போட்டியிட மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் மனு அளித்தார்.
கலாம் பேரன் விருப்ப மனு
அப்துல் கலாமின் மறைவுக்குப் பிறகு அவரது அண்ணன் முகம்மது முத்துமீரான் லெப்பை மரைக்காயரின் பேரன் ஷேக் சலீம், கடந்த 2015 செப்டம்பர் 28-ம் தேதி பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட தமிழிசை சவுந்தரராஜனிடம் நேற்று அவர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். மூத்த தலைவர் இல.கணேசன், மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் அப்போது உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT