Published : 06 Dec 2021 03:09 AM
Last Updated : 06 Dec 2021 03:09 AM

சாலைகளில் தண்ணீர் தேங்கியது, பல இடங்களில் மின்தடை: நெல்லை மக்களை சிரமத்தில் ஆழ்த்திய திடீர் மழை- கரிவலம்வந்தநல்லூரில் வெள்ளத்தை ‘வென்ற’ மதுபிரியர்கள்

கரிவலம்வந்தநல்லூரில் டாஸ்மாக் கடையை வெள்ளம் சூழ்ந்த நிலையில், மதுபிரியர்கள் இடுப்பளவு தண்ணீரில் நடந்து சென்று மது வாங்கினர்.

திருநெல்வேலி/ தென்காசி

திருநெல்வேலி, பாளையங்கோட்டை பகுதியில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. கல்லிடைக்குறிச்சி, சுரண்டை உட்பட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. பல இடங்களில் மின்தடை ஏற்பட்டதால் மக்கள் சிரமமடைந்தனர்.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1,412 கனஅடி தண்ணீர் வந்தது. 2,705 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. 143 அடி உயரம் உள்ள இந்த அணையில் நீர்மட்டம் 136.20 அடியாக இருந்தது. 156 அடி உயரம் உள்ள சேர்வலாறு அணையில் நீர்மட்டம் 137.20 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 854 கனஅடி நீர் வந்தது. 100 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. 118 அடி உயரம் உள்ள இந்த அணை நீர்மட்டம் 116.15 அடியாக இருந்தது.

இதேபோல, 50 அடி உயரம் உள்ள வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 49 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 216 கனஅடி நீர் வந்தது. 22.96 அடி உயரம் உள்ள நம்பியாறு அணை ஏற்கெனவே நிரம்பிவிட்ட நிலையில், பலத்த மழை பெய்ததால் அணைக்கு விநாடிக்கு 1,500 கனஅடி நீர் வந்தது. நீர்வரத்து முழுவதும் அப்படியே உபரியாக வெளியேற்றப்பட்டது. 52.25 அடி உயரம் உள்ள கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 50.50 அடியாக இருந்தது. அணைக்கு வரும் 100 கனஅடி நீரும் அப்படியே வெளியேற்றப்பட்டது.

நேற்று மாலை திருநெல்வேலி மாவட்டத்தில் திடீரென பலத்த மழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் தேங்கியது. பல இடங்களில் மின் தடை ஏற்பட்டதால் மக்கள் சிரமமடைந்தனர்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் சிவகிரியில் மட்டும் 6 மி.மீ. மழை பதிவானது. மற்ற பகுதிகளில் மழைப்பதிவு இல்லை. மாவட்டத்தில் உள்ள 5 அணைகளும் நிரம்பியுள்ளதால், அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது.

கடனாநதி அணையில் இருந்து விநாடிக்கு 112 கனஅடி, ராமநதி அணையில் இருந்து 40 கனஅடி, கருப்பாநதி அணையில் இருந்து 50 கனஅடி, குண்டாறு அணையில் இருந்து 50 கனஅடி, அடவிநயினார் அணையில் இருந்து 30 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

மதுபிரியர்கள் சிரமம்

கடந்த ஒரு வாரமாக பெய்த பலத்த மழையால் கரிவலம்வந்தநல்லூரில் உள்ள டாஸ்மாக் கடையை வெள்ளம் சூழ்ந்தது. மது பிரியர்கள் சிரமப்பட்டனர்.

இடுப்பளவு தேங்கிய தண்ணீரையும் பொருட்படுத்தாமல் நீரில் இறங்கிச் சென்று, மதுபானம் வாங்கிச் சென்றனர். சென்னிகுளம் அருகே உள்ள ரயில்வே பாலத்தின் அடியில் மழை நீர் தேங்கியதால் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மாற்று வழியில் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

சென்னிகுளம் அருகே உள்ள ரயில்வே பாலத்தின் அடியில் மழை நீர் தேங்கியதால் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மாற்று வழியில் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x