Last Updated : 05 Dec, 2021 02:45 PM

 

Published : 05 Dec 2021 02:45 PM
Last Updated : 05 Dec 2021 02:45 PM

கரோனா தடுப்பூசி புதுச்சேரியில் கட்டாயம் ஏன்?- தமிழிசை விளக்கம்

புதுச்சேரி

உலகம் முழுவதும் பொருந்தொற்றுக்கான தனிப்பட்ட சட்ட விதிமுறைகள் இருக்கிறது. கொள்ளை நோய்க்கு எதிராக பொதுமக்களை பாதுகாப்பாக இருக்க கட்டாயப்படுத்தும் என்ற நிலை இருக்கிறது. அதனடிப்படையில் பொது மக்களின் நலனுக்காகதான் தடுப்பூசி புதுச்சேரியில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

புதுச்சேரி, வில்லியனூரை அடுத்த ஒதியம்பட்டு பகுதியில் மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நரிக்குறவர் இன மக்களுக்கு புதுச்சேரி செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலமாக வெள்ள-நிவாரணப் பொருட்களை துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று வழங்கினார். சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ஸ்ரீராமலு, புதுச்சேரி செஞ்சிலுவைச் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர். நரிக்குறவர் இன மக்களின் வீடுகளையும் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளையும் துணைநிலை ஆளுநர் பார்வையிட்டார். அந்தப் பகுதியில் மக்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அங்கிருந்த குழந்தைகளுக்கு பாடபுத்தகங்கள், நோட்டுகள் மற்றும் எழுது பொருட்கள் ஆகியவற்றை வழங்கினார். குழந்தைகளுடன் பேசி மகிழ்ந்தார்.

அதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, " நரிகுறவர் இன மக்களின் வீடுகளைப் பார்வையிட்டேன். பாழடைந்து, இடிந்துபோன நிலையில் இருக்கிறது.
பெண்கள் கழிப்பறை வசதி வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். நிரந்தரமான கழிப்பறைகள் கட்டுவதற்கு முன்பாக, ஒரு நடமாடும் கழிப்பறையை உடனடியாக நிறுத்தும்படி அதிகாரிகளிடம் கூறியிருக்கிறேன். மேலும், நிரந்தரமாக கழிப்பறைகள் கட்ட ஏற்பாடு செய்திருக்கிறேன். அதற்கு பின் வீடுகள் கட்டித்தர ஏற்பாடு செய்யப்படும். முதலமைக்சருடன் ஆலோசனை நடத்தி அதற்கான முடிவு எடுக்கப்படும். இந்த மக்களுக்கு உறுதுணையாக இருப்போம்.

புதுச்சேரியில் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தி இருக்கிறோம். இது பொது மக்களின் நலனுக்காகதான் தடுப்பூசி புதுச்சேரியில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நிலையில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. தடுப்பூசிகள் கரோனா வைரஸ்களில் இருந்து பாதுகாப்பு தருகிறது.

உலகம் முழுவதும் பொருந்தொற்றுக்கான தனிப்பட்ட சட்ட விதிமுறைகள் இருக்கிறது. கொள்ளை நோய்க்கு எதிராக பொதுமக்களை பாதுகாப்பாக இருக்க கட்டாயப்படுத்தும் என்ற நிலை இருக்கிறது. அதனடிப்படையில் பொதுமக்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற பிரச்சாரத்தை அனைவரும் முன்னெடுப்பது நல்லது. யாரையும் தண்டிக்க வேண்டும் என்ற நோக்கம் அரசுக்கு இல்லை. போதிய அளவு தடுப்பூசி, மருந்து தரப்பட்டுள்ளது. நிர்வாக ரீதியாக சரியாக நடக்கிறது. மழை வெள்ளக்காலத்திலும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் இருக்கிறேன். தெலுங்காவினால் இருந்தாலும் இங்கு நடப்பவற்றை கேட்கிறேன் என்று குறிப்பிட்டார்.
அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, "புதுச்சேரியில் தடுப்பூசி பணிகளை வேகப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தேசிய அளவை விட புதுச்சேரியில் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கை குறைவாக இருப்பதே இம்முடிவுக்கு முக்கியக்காரணம்" என்று குறிப்பிடுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x