

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவுத் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் மலரஞ்சலி வைத்து மரியாதை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அமமுக பொதுச் செயலாளர் தினகரனும் தொண்டர்களுடன் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
இதுகுறித்து அமமுக கட்சி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், “ தீயசக்திகளிடமிருந்து அன்னை தமிழகத்தைக் காத்திட, நம் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு, நம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கட்டி காக்கப்பட்ட இயக்கம், ஒரு சிலரின் சுயநலத்தால் தன் தனித்தன்மையையும், அடையாளத்தையும் இழந்துவிட்ட நிலையில், நம் தலைவர்களின் லட்சியங்களை "அம்மாமக்கள் முன்னேற்றக் கழகம்" எனும் ஜனநாயக ஆயுதம் கொண்டு மீட்டெடுத்தே தீருவோம் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் கழக நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.