குமரி, திருச்சி, மதுரை உட்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

குமரி, திருச்சி, மதுரை உட்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Updated on
1 min read

தமிழகத்தில் கன்னியாகுமரி, திருச்சி, மதுரை, சேலம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தென் தமிழக பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 5-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, தென்காசி, திருச்சி, சேலம், நாமக்கல், கோவை, ஈரோடு, தருமபுரி, திருவண்ணாமலை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும் இதர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

6-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். 7-ம் தேதி தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

8-ம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை.

4-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் எடப்பாடி, நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஆகிய இடங்களில் தலா 9 செமீ, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் 8 செமீ, சேலம் மாவட்டம் மேட்டூரில் 7 செமீ, கரூரில் 6 செமீ, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, ராசிபுரம், சேலம் ஆகிய இடங்களில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்கள் செல்ல வேண்டாம்

மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஜோவத் புயல், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்து ஒடிசா கடற்கரையோரம் நிலைகொள்ளும். 5-ம் தேதி மத்திய மேற்கு வங்கக் கடல், ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளில் புயல் காற்று மணிக்கு 50 முதல் 60 கிமீ வேகத்திலும், இடையிடையே 70 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in