Published : 05 Dec 2021 04:07 AM
Last Updated : 05 Dec 2021 04:07 AM
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ராகேஷ்(30). இவர், துபாயில் உள்ள அழகு நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். அதே இடத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் மீனம்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயந்தி (27) என்பவரும் ஊழியராக பணியாற்றி வந்தார். ஜெயந்தி கணவரைப் பிரிந்து வசித்து வருகிறார். துபாயில் இருந்த போது இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
ராகேஷ், ஜெயந்தி ஆகியோர் கடந்த ஜூலை மாதம் இந்தியா திரும்பினர். ராகேஷ் கேரளாவுக்குச் சென்று விட்டார். ஜெயந்தி தன் வீட்டுக்கு சென்றார்.
இந்நிலையில், ராகேஷ் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்த தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்த ஜெயந்தி, ராகேஷை தொடர்பு கொண்டு கோவைக்கு வருமாறு அழைத்தார். ராகேஷ் நேற்று முன்தினம் பீளமேடு அருகேயுள்ள ஒரு குடியிருப்புக்கு வந்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஜெயந்தி, தன்னிடம் இருந்த ஆசிட்டை ராகேஷ் மீது ஊற்றிவிட்டு, கத்தியால் அவரை குத்தினார். இதில் ராகேஷ் படுகாயமடைந்தார். ஜெயந்தியும் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதைப்பார்த்து இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராகேஷ் அளித்த புகாரின் பேரில்,ஜெயந்தி மீது 3 பிரிவுகளிலும், ‘தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, ரூ.18 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக ’ ஜெயந்தி அளித்த புகாரின் பேரில் ராகேஷ் மீது 2 பிரிவுகளிலும் என, தனித்தனியாக இரு வழக்குகளைப் பதிந்து பீளமேடு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT