

சென்னை வேளச்சேரி புதிய தலைமை செயலகம் காலனி 2-வது தெருவை சேர்ந்தவர் வெங்கடாச்சலம் (62). தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்தவர்.
இந்நிலையில் வெங்கடாசலம் கடந்த 1-ம் தேதி வேளச்சேரியில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் வேளச்சேரி போலீஸார் வெங்கடாசலம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ராயப்பேட்டை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் வெங்கடாசலம் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சிலரது மிரட்டலுக்கு பயந்தே வெங்கடாசலம் தற்கொலை செய்து கொண்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
வெங்கடாசலம் தற்கொலை தொடர்பாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்றுசெய்தியாளர்களிடம் கூறும்போது, “வெங்கடாசலத்தின் தற்கொலை தொடர்பாக, பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஆனால் அவர் மனைவிஎந்த சந்தேகத்தையும் எழுப்பவில்லை. விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி அவருக்கு சம்மன்கூட அனுப்பப்படவில்லை. மனஉளைச்சல் தான் அவரின் மரணத்துக்கு காரணம் என்றால் அதுதொடர்பான விசாரணை நடத்தப்படும். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே முழுமையான தகவல் தெரியும்” என்றார்.