Published : 04 Dec 2021 08:35 AM
Last Updated : 04 Dec 2021 08:35 AM

கனமழை காரணமாக மதுரை, விருதுநகரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் இன்று அதிகாலை முதலே நகரின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் ஆற்றில் இரு கரைகளையும் தொட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை முதலே பலத்த மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி மதுரையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதேபோல், விருதுநகர் மாவட்டத்திலும் மழை பெய்து வருகிறது. அதனால் அங்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மற்றும் நாமக்கல்லில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தனர்.

இன்று எங்கெங்கு மழைக்கு வாய்ப்பு?

இன்று (4-ம் தேதி) கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன மழையும், இதர தென் மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய உள்மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x