Last Updated : 04 Dec, 2021 03:09 AM

 

Published : 04 Dec 2021 03:09 AM
Last Updated : 04 Dec 2021 03:09 AM

நான்கு வழி சாலைகளின் நடுவே மேய்க்கப்படும் கால்நடைகள் விபத்தில் சிக்கும் மாடுகளும் அதன் உரிமையாளர்களும்.. வழக்கால் பாதிக்கப்படும் வாகன ஓட்டிகள்

நான்குவழி தேசிய நெடுஞ்சாலை களின் நடுவே மேய்க்கப்படும் மாடுகள் வாகனங்களின் அதிக சத்ததால் மிரண்டு திடீரென சாலையில் குதிக்கின்றன. இதனால் விபத்து ஏற்பட்டு மாடுகளும், அதன் உரிமையாளரும் விபத்தில் சிக்குகின்றனர். சாலையில் பயணிக்கும் வாகனமும் சேதமடைகிறது.

நான்குவழி தேசிய நெடுஞ்சாலைகளின் நடுவே, வாகனங்களில் இருந்து வெளியேறும் நச்சுக் காற்றை உள்வாங்கவும், இரவு நேரங்களில் வாகனங்களின் முகப்பில் உள்ள விளக்குகளின் எதிரெதிர்வாகன ஓட்டிகளின் கண் கூச்சத்தை தடுக்கவும் நெடுஞ்சாலைத்துறை கார்பன்டை ஆக்ஸைடை உள்வாங்கும் செடி வகைகளை வளர்த்துவருகிறது. அவ்வாறு வளர்க்கும் போது மாடுகள் விரும்பி உண்ணும் புற்களும் வளர்கின்றன. அவ்வாறு வளர்க்கப்படும் புற்களையும், செடிகளையும் பராமரிக்கவும் ஒப்பந்த பணிகள் மூலம் நெடுஞ் சாலைத் துறை அவற்றைக் கட்டுப் படுத்தி வருகிறது.

இருப்பினும் சில இடங்களில்சாலையில் நடுவே உள்ள புற்களைமாடுகளை கொண்டு மேய விடு கின்றனர் அதன் உரிமையாளர்கள். குறிப்பாக உளுந்தூர்பேட்டை-சேலம் நான்குவழி தேசிய நெடுஞ்சாலையின் நடுவே, மாடுகளைக் கொண்டு புற்களை கிராம மக்கள் மேய விடுகின்றனர். இதனால் சாலைகளில் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் எழுப்பும் ஒலியால் மாடுகள் மிரண்டு திடீரென சாலையில் குதிக்கின்றன. இதனால் அதிவேகமாக வரும் வாகனத்தில் சிக்கி மாடுகள் மட்டுமின்றி, வாக னத்தில் பயணிப்பவர்களும், மாடுமேய்ப்பவர்களும் காயமடைவ தோடு, சிலர் உயிரிழக்கின்றனர்.

அண்மையில் உளுந்தூர் பேட்டை அருகே ஏ.குமாரமங் கலத்தில் சாலையில் நடுவே மேய்த்துக் கொண்டிருந்த மாடு மிரண்டு சாலையில் குறுக்கிட்டது. அப்போது, மாடு காரில் சிக்கி உயிரிழந்தது. இதோடு, மாட்டை கயிறு கொண்டு பிடித்திருந்த கோவிந்தம்மாள் என்பவரும் உயிரிழந்தார். இதில் வேடிக்கை என்னவென்றால், தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்து விபத்து ஏற்படுத்தி உயிரிழப்புக்கு காரணமானவர் என காரை ஓட்டி வந்த நபர் மீது உளுந்தூர்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில்," சாலையில் நடுவே மாடு மேய்க்கக் கூடாது என தேசிய நெடுஞ்சாலை அறிவித்துள்ளது. அவ்வாறு மாடு மேய்ப்பவர்களுக்கு திருச்சி மாநகராட்சியில் அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் பெரும்பாலான இடங்களில் சாலையின் நடுவே மாடுகளை மேய விடுகின்றனர். இதனால் ஏற்படும் விபத்துக்கு வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்வது எந்த விதத்தில் நியாயம்" என்கின்றனர்.

இதுகுறித்து உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி மணிமொழியான் கூறு கையில், "சாலையின் நடுவே மாடுகளை மேய்ப்பவர்களை காவல்துறை எச்சரிக்கை விடுக்கலாமே தவிர அபராதம் விதிக்க வழி யில்லை.

மாறாக தேசிய நெடுஞ்சாலைத் துறை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அமைப்புகள் தான் அபராதம் விதித்து, மாடுகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் உள்ளது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x