Published : 17 Mar 2016 09:15 AM
Last Updated : 17 Mar 2016 09:15 AM

காங்கிரஸுடன் விரைவில் தொகுதிப் பங்கீடு பேச்சு: மு.க.ஸ்டாலின் தகவல்

காங்கிரஸ் தரப்பில் குழு அமைக்கப்பட்டதும், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்குவோம் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை கிழக்கு மாவட்ட திமுக புதிய நிர்வாகிகள், அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் நிருபர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. அது விரைவில் வெளியிடப்படும். திமுக தரப்பில் தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சி தரப்பில் இன்னும் குழு அமைக்கவில்லை. அக்கட்சி குழு அமைத்ததும், தொகுதிப் பங்கீடு குறித்து விரைவில் பேசுவோம். தொகுதிப் பங்கீடு அறிவிப்பை கருணாநிதி வெளியிடுவார். திமுக ஆட்சி அமைந்தால் கவுரவக் கொலைகள் நடக்காமல் தடுக்கப்படும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

உடுமலைப்பேட்டையில் நடந்த கவுரவக் கொலையைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் நடத்துமா என்று கேட்டபோது, ‘‘வரும் 21-ம் தேதி நடக்கும் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இதுபற்றி ஆலோசித்து முடிவெடுக்கப்படும்’ என்றார் ஸ்டாலின்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x