

பள்ளிகளில் ஒமைக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் வியாழக்கிழமை இருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அந்தவகையில், ஒமைக்ரான் வைரஸைத் தடுக்க கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளாகப் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
* வேகமாகப் பரவும் ஒமைக்ரான் வைரஸ் விழிப்புணர்வு & நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் பள்ளிகளில் தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும்.
* அனைத்து வகைப் பள்ளிகளிலும் அரசால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும்.
* 1 முதல் 8-ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
* நேரடியாகவும், ஆன்லைனிலும் வகுப்புகள் நடைபெறலாம்.
* பள்ளிக்குள் நுழையும் அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதனை மேற்கொண்டு, அதிக வெப்பநிலை இருப்போரை அனுமதிக்கக் கூடாது.
* ஆசிரியர்கள் முகக்கவசம் அணிந்து மாணவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.
* மாணவர்கள் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும்.
* வகுப்பறைகளிலும், பள்ளியிலும் தனி மனித இடைவெளியைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
* பள்ளியில் நீச்சல் குளங்களை மூட வேண்டும்.
* இறை வணக்கக் கூட்டம், விளையாட்டு நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும்.
* நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை செயல்பாடுகளை அனுமதிக்கக் கூடாது.
இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.