Published : 31 Mar 2016 08:48 AM
Last Updated : 31 Mar 2016 08:48 AM

சிறுதாவூரில் கன்டெய்னர் லாரிகள் விவகாரம்: விசாரித்து உரிய நடவடிக்கை - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

முதல்வர் ஜெயலலிதாவின் சிறுதாவூர் வீட்டருகில் கன்டெய்னர் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் புகார்கள் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

முதல்வர் ஜெயலலிதாவின் சிறுதாவூர் வீடு பகுதியில், கண்டெய் னர் லாரிகள் நிற்பதாகவும், அதில் பணம் ஏற்றப்படுவதாகவும் சமீபத் தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டு தெரிவித்த துடன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கும் புகார் மனு அனுப்பினார்.

இதைத் தொடர்ந்து, நேற்று திமுக சார்பில் அக்கட்சியின் வழக்கறிஞர்கள் வி.அருண் உள்ளிட்டோர் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து 3 மனுக்கள் அளித்தனர். அவற்றில், கடந்த 27,28 தேதிகளில் சிறுதாவூரில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டு வளாகத்தில் கன்டெய்னர் லாரிகள் நிறுத்தப்பட்டிருந்ததாகவும், அதன் பின் அவை வெளியில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அடுத்த மனுக்களில், கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் அலுவலகத்தை பயன்படுத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட ஆட்டோ பெர்மிட் தற்போது வழங்கப்படுவதை தடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இவை தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:

ஏற்கெனவே வைகோ அனுப்பி யுள்ள புகார் கடிதம், தேர்தல் ஆணை யம் மூலம் எனக்கு அனுப்பப் பட்டுள்ளது. தற்போது திமுக சார் பிலும் மனு அளிக்கப்பட்டுள்ளது. இவற்றின் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

புகார் வந்தால் உடனடியாக அது தொடர்பாக நாங்கள் சோதனை நடத்த முடியாது. நீதிமன்ற உத்தரவு பெற்று காவல்துறையோ, வருமான வரித் துறையோதான் சோதனை செய்ய வேண்டும். வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டதாக தகவல் இருந்தால் அதை நிறுத்தி சோதனையிட முடியும். எனவே விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், 2014-ல் நிறுத்தப்பட்ட ஆட்டோ பெர்மிட் தற்போது வழங்கப்படுவதாக அளிக்கப்பட்ட புகாரிலும் விசாரணை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

டெல்லிக்கு பயணம்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இன்று காலை டெல்லிக்கு செல்கிறார். டெல்லியில் தமிழக தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் தேர்தல் தொடர்பாக இதுவரை பெறப்பட்டுள்ள 230-க்கும் மேற்பட்ட புகார்கள் மீது எடுக் கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து துணை தேர்தல் அதிகாரி ஆய்வு செய்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x