

நாகூர் தர்கா கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆண்டவர் ஷெரீபுக்கு சந்தனம் பூசும் வைபவம் இன்று (மார்ச் 20) அதிகாலை நடைபெறுகிறது. இதற்கான சந்தனம் வைக்கப்பட்டிருந்த சந்தனக்கூடு நேற்று இரவு நாகப்பட்டினத்தில் இருந்து ஊர்வலம் மூலம் எடுத்து வரப்பட்டது.
நாகப்பட்டினம் அபிராமி அம்மன் கோயில் திருவாசல் திடலில் இருந்து அழகான கூட்டில் சந்தனம் வைக்கப் பட்டு, மின் விளக்குகளால் அலங்கரிக் கப்பட்டிருந்த ஊர்தியில் வைக்கப்பட்டு நேற்று இரவு 7 மணியளவில் சந்தனக்கூடு ஊர்வலம் வாணவேடிக்கை, மேளதாளக் கச்சேரி, பேண்டு வாத்தியத்துடன் புறப்பட்டது.
நாகை முக்கிய வீதிகள் வழியாக வந்த சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று பின்னிர வில் நாகூர் வந்தடைந்தது. ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். நாகூரின் முக்கிய வீதிகளை சுற்றிய சந் தனக்கூடு ஊர்வலம் இன்று அதிகாலை தர்காவின் வாசலை வந்தடையும்.
அதனைத் தொடர்ந்து நாகூர் பழனி யாண்டி பிள்ளை குடும்பத்தினருக்கு முதல் மரியாதை கொடுக்கப்பட்டு, தர்காவுக்கு அழைத்து வரப்படுவர். தர்கா வாசலில் நிர்வாக அறங்காவலர் ஷேக் ஹசன் சாகிபு, ஆலோசனைக் குழு உறுப்பினர் செய்யது முகம்மது சாகிபு உள்ளிட்ட தர்கா நிர்வாகிகளும், நாகூர் ஜமாத்தாரும் நின்று சந்தனக்கூடை வரவேற்பர். அதிகாலை 4 மணியளவில் பரம்பரை கலிபா மஸ்தான் சாகிபு துவா ஓதி வழிபாட்டை நடத்த அதனைத் தொடர்ந்து, ஆண்டவர் ஷெரீபுக்கு சந்தனம் பூசப்படும்.
சந்தனக்கூடு விழாவையொட்டி, நாகை மாவட்ட காவல் துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன.
மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
அலங்கார ஊர்தியில் திடீர் தீ
நாகையில் இருந்து சந்தனக்கூடு வைக்கப்பட்ட ஊர்தி புறப்படுவதற்கு முன் மின் விளக்குகளால் அலங்காரம் செய்துகொண்டிருந்தபோது, ஊர்தியின் உச்சிப் பகுதியில் திடீரென தீப்பொறி கிளம்பி, தீப்பற்றியது.
உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு சரிசெய்யப்பட்டவுடன் 20 நிமிடம் தாமதமாக சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டது.