Published : 02 Dec 2021 12:21 PM
Last Updated : 02 Dec 2021 12:21 PM

சமத்துவத்தையும், மனிதாபிமானத்தையும் சிதைக்கும் சிபிஎஸ்சி பாடத்திட்டம்: ஜவாஹிருல்லா கண்டனம்

கோப்புப் படம்

சென்னை

சமத்துவத்தையும், மனிதாபிமானத்தையும் சிதைக்கும் வகையில் சிபிஎஸ்சி பாட்டத்திட்டம் அமைந்து இருப்பதாக சட்டப்பேரவை உறுப்பினரும், மனித நேய மக்கள் கட்சித் தலைவருமான ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

"குஜராத் மாநிலத்தில் 12ம் வகுப்பு சமூக அறிவியல் பருவம் 1 தேர்வில் "2002 இல் குஜராத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவு மற்றும் பரவலான முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை எந்த அரசாங்கத்தின் கீழ் நடந்தது?"என்ற கேள்வி வினாத்தாளில் இடம்பெற்றுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

கல்வி கற்பிப்பதின் முக்கிய நோக்கமே சமத்துவமும் மனிதாபிமானமும் மிக்க சமூகத்தை கட்டமைப்பதற்காகத் தான் இருக்க வேண்டும். இந்த உயர்ந்த நோக்கத்தை சிதைக்கும் வகையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் இதுபோன்ற கேள்விகள் இடம் பெற்று இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான மனநிலையை மாணவர்களின் மத்தியில் விதைப்பது இந்தியாவின் எதிர்காலத்தை மிகப்பெரிய அளவில் பிளவுபடுத்தும் நோக்கம் கொண்டதாக அமையும். கடுமையான எதிர்ப்புகள் கிளம்பிய பிறகு சிபிஎஸ்சி தற்போது விழித்துக்கொண்டு வினாத்தாள் தயாரித்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுவது ஏற்புடையதாக இல்லை.

பொதுவாக வினாத்தாள்கள் பெறப்பட்டு உயரதிகாரிகள் வாயிலாக மேற்பார்வை செய்யப்பட்ட பின்னரே மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கும் முறை தற்போது வரை உள்ளது. பிரச்சனைகள் பெரிதாகியவுடன் வினாத்தாள் தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை என்று சொல்லி சிபிஎஸ்சி நிர்வாகம் தப்பித்துக் கொள்ள பார்க்கிறது.

இதற்கு முன்னரும் பாடத்திட்டத்திலும் வினாத்தாளிலும் பல குளறுபடிகளை சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான முன்னெடுப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. கல்வியின் நோக்கத்தையே சிதைக்கும் இந்த முயற்சியினை முன்னெடுக்கும் சிபிஎஸ்சி பாடத்திட்ட குழுவையும் மத்திய அரசையும் வன்மையாக கண்டிக்கிறேன்.

இது போன்று இனிவரும் காலங்களில் எப்போதும் நிகழாத வண்ணம் மிகச் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x