

அரசு இ-சேவை மையங்களில் சென்னை மாநகராட்சியின் வரிகளை டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் செலுத்தலாம் என அரசு கேபிள் டிவி நிறுவன மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் தமிழகம் முழு வதும் அரசு இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னை உட்பட பல்வேறு இடங்களில் 486 இடங்களில் இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சி தலைமையிடம், மாநகராட்சியின் அனைத்து மண்டல அலுவலகங்கள், பகுதி அலுவலகங்கள், கோட்ட அலுவல கங்கள் ஆகிய அலுவலக வளாகங்களில் நிறுவப்பட்டுள்ள அரசு இ-சேவை மையங்களில் சொத்து வரி, தொழில்வரி மற்றும் நிறுவன வரி ஆகியவற்றை தற்போது வங்கி வரைவோலையாகவோ அல்லது காசோலையாகவோ செலுத்தும் வசதி நடைமுறையில் உள்ளது.
இந்த வசதியை பயன்படுத்தி இதுவரை ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 192 பேர் பல்வேறு வரிகளை செலுத்தியுள்ளனர். இந்த வகையில் அரசுக்கு ரூ.54 கோடியே 5 லட்சத்து 88 ஆயிரத்து 622 வரி வசூலாகியுள்ளது.
இந்த வசதியை மேம்படுத்தும் விதமாக டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலமாகவும், வரி களை செலுத்தும் வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, பிரத்யேக கருவிகள் அனைத்து இ-சேவை மையங்களிலும் பொருத்தப்பட்டுள்ளன. டெபிட் கார்டு மூலம் வரி செலுத்தும்போது அதற்கென தனியான சேவைக் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. அனைத்து வங்கிகளின் டெபிட் கார்டுகளையும் பயன்படுத்தலாம். கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது 1.5 சதவீதம் சேவைக் கட்டணம் மற்றும் அதற்கான சேவை வரி வசூலிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.