Published : 01 Dec 2021 06:38 AM
Last Updated : 01 Dec 2021 06:38 AM

அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி; வட ​ஆந்திரா அருகே புயலாக டிச 4-ல் கரையை கடக்கும்: 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

அந்தமான் அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று வரும் 4-ம் தேதி வடக்கு ஆந்திரா- தெற்கு ஒடிசா பகுதியில் கரையை கடக்கும். குமரிக்கடல் பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் செய்தியாளர் களிடம் நேற்று கூறியதாவது:

தெற்கு தாய்லாந்து, அதை ஒட்டிய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது விரைவில் தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு நகரக்கூடும். இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 2-ம் தேதி (நாளை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதையடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெற்று 4-ம் தேதி வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா பகுதியில் கரையை கடக்கும். இதன் தாக்கத்தால் தமிழகத்தில் வரும் நாட்களில் மழை குறையும்.

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி குமரிக்கடல் பகுதிவரை நீடிப்பதால் டிச.1-ம் தேதி (இன்று) கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதி களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். 2, 3-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், 4-ம் தேதி ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் ஒருசில இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

30-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் தேனி மாவட்டம் வீரபாண்டியில் 12 செ.மீ., சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர், தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

அந்தமானை காற்றழுத்த தாழ்வு பகுதி நெருங்குவதால் 1-ம் தேதி (இன்று) அந்தமான் கடல் பகுதிகள், தீவு பகுதிகள், 2-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், 3-ம் தேதி மத்திய வங்கக்கடல் பகுதிகள், 4-ம் தேதி மத்திய மேற்கு, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அதிகபட்சம் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x