சினிமா பார்த்துவிட்டு திரும்பிய பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: மதுரையில் காவலர் சஸ்பெண்ட்

முருகன்
முருகன்
Updated on
1 min read

மதுரையில் சினிமா பார்த்துவிட்டு நள்ளிரவில் திரும்பிய பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக காவலர் ஒருவரை, காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா பணியிடை நீக்கம் செய்தார்.

மதுரை வில்லாபுரம் கதிர்வேல் நகரைச் சேர்ந்தவர் மகேஷ்(45). அவனியாபுரம் பகுதியில் கம்பெனி நடத்துகிறார். இவரது கம்பெனியில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் உட்பட 5 பேர் கடந்த சனிக்கிழமை இரவு செல்லூர் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் படம் பார்த்துவிட்டு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தனர். மதுரை டவுன் ஹால் சாலையில் வரும்போது அங்கிருந்த திலகர்திடல் குற்றப்பிரிவு காவலர் முருகன் உட்பட 3 பேர் அவர்களை நிறுத்தி விசாரித்தனர்.

பின்னர், “மகேஷுடன் சென்ற பெண்ணை மட்டும் தனியாக விசாரிக்க வேண்டும். நாங்களே அந்த பெண்ணை அவரது வீட்டில் கொண்டு சென்று விடுகிறோம்” எனக் கூறி, மகேஷ் உட்பட 2 பேரையும் அனுப்பி உள்ளனர். மேலும் மகேஷிடம் இருந்த ஏடிஎம் கார்டு, ரூ.11 ஆயிரத்தை காவலர் முருகன் பறித்துக் கொண்டதாக தெரிகிறது.

இந்நிலையில், விசாரணை என்ற பெயரில் அப்பெண்ணை டவுன் ஹால் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் காவலர்முருகன் பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இதற்கிடையே தன்னிடம் பணம், ஏடிஎம் கார்டு, ஓட்டுநர் உரிமத்தை போலீஸ்காரர் முருகன் பறித்துக் கொண்டதாக திலகர்திடல் போலீஸில் மகேஷ் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் உதவி ஆணையர் ரவீந்திரன், காவல் ஆய்வாளர் சங்கர் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

இதில் அப்பெண்ணை காவலர் முருகன் பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது. இதையடுத்து தெற்கு மகளிர் காவல் நிலையத்தில் முருகன் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா உத்தரவிட்டார். காவலர் முருகன் ராமநாதபுரம் மாவட்டம் பேரையூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in