Published : 01 Dec 2021 06:38 AM
Last Updated : 01 Dec 2021 06:38 AM

கணக்கில் வராத ரூ.2.27 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் 26 நாளுக்கு பிறகு பொதுப்பணி துறை செயற்பொறியாளர் வேலூரில் கைது: லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் நடவடிக்கை

வேலூர் மற்றும் ஓசூரில் லஞ்சஒழிப்புப் போலீஸார் நடத்திய சோதனையில் ரூ.2.27 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில்பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஷோபனா 26 நாட்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.

வேலூரில் உள்ள தந்தை பெரியார் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் பொதுப்பணித்துறை வேலூர் கோட்ட தொழில்நுட்ப கல்வி செயற்பொறியாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, செயற்பொறியாளராக கடந்த 2 ஆண்டுகளாக ஷோபனா (57) என்பவர் பணியாற்றி வந்தார்.

இவர், தீபாவளி பண்டிகையையொட்டி கட்டிட ஒப்பந்ததாரர்களிடம் பணம் வசூலிப்பதாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நவ.2-ம் தேதி அரியூர் சாலையில் நின்று கொண்டிருந்த அவரது வாகனத்தை போலீஸார் சோதனையிட்டனர்.

அப்போது, ஷோபனாவின் பையில் இருந்த ரூ.5 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மாவட்ட அலுவல் ஆய்வுக்குழு துணை அலுவலர் முருகன், அளித்த புகாரின்பேரில் ஷோபனா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து ஷோபனா தங்கியிருந்த அறையில் நவ.3 அதிகாலை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் நடத்திய சோதனையில், ரூ.15.85 லட்சம் பணம், ரூ.4 லட்சம் மதிப்புள்ள 3 காசோலைகள், அலுவலகம் தொடர்பான 18 ஆவணங்கள் சிக்கின.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நேரு நகரில் உள்ள ஷோபனாவின் வீட்டிலும் நடந்த சோதனையில், ரூ.2 கோடியே 6 லட்சத்து 90 ஆயிரம் பணம், 38 பவுன் தங்க நகைகள், 11 வங்கிக்கணக்கு புத்தகங்கள், 1.3 கிலோ வெள்ளிப் பொருட்கள், பல்வேறு வங்கிகளில் ரூ.27.98 லட்சத்துக்கான வைப்பு நிதி ஆவணங்கள், 14 சொத்துப் பத்திரங்கள் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மொத்தமாக ரூ.2.27 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஷோபனா மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸில் வழக்குப் பதிவான நிலையில் அவர் மீது பொதுப்பணித்துறை நிர்வாகம் துறைரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சில நாட்களுக்கு முன்பு திருச்சிக்கு பணியிட மாற்றம் செய்தனர். அங்கு அவர் பணியில் சேராமல் மருத்துவப் விடுப்பில் இருந்தார்.

5 மணி நேரம் விசாரணை

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்காக ஷோபனாவை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் ஓசூரில் இருந்து வேலூருக்கு நேற்று அழைத்து வந்தனர். சுமார் 5 மணி நேரம் விசாரணைக்குப் பிறகு அவரை கைது செய்தனர்.

26 நாட்களுக்குப் பிறகுஷோபனா கைது செய்யப்பட்டிருப்பது குறித்து போலீஸார் கூறும்போது, “ஷோபனாவிடம் இருந்து ரூ.2.27 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுஉள்ளது. விசாரணை அதிகாரியாக துணை காவல் கண்காணிப்பாளர் மதியழகன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையிலான போலீஸார் ஷோபனாவை கைது செய்துள்ளனர்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x