கமல் இன்னும் டிஸ்சார்ஜ் ஆகவில்லை: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மக்கள் நீதி மய்யம் 

கமல் இன்னும் டிஸ்சார்ஜ் ஆகவில்லை: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மக்கள் நீதி மய்யம் 
Updated on
1 min read

கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதாகப் பரவும் தகவலில் உண்மையில்லை என்று மக்கள் நீதி மய்யம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு சமீபத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அமெரிக்கா சென்று திரும்பிய பின்னர் தனக்குத் தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின், சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்கள் பலரும் கமல்ஹாசன் விரைந்து குணமடைய வேண்டி வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் ரஜினிகாந்த், கமலிடம் தொலைபேசியில் பேசி, அவரது உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தார்.

கமலின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதாக ஒரு தகவல் இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அத்துடன் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரவும் அந்தத் தகவலில் உண்மையில்லை என்று மக்கள் நீதி மய்யம் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

அதில், ''தலைவர் மருத்துவமனையிலிருந்து இன்னும் டிஸ்சார்ஜ் ஆகவில்லை. ஆனால், நலமுடன் இருக்கிறார். விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார். வெளியில் உலவும் நிழற்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அப்போலோ மருத்துவமனையில் கால் அறுவை சிகிச்சை முடிந்து தலைவர் வீடு திரும்பியபோது வெளியான புகைப்படம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in