Published : 30 Nov 2021 01:31 PM
Last Updated : 30 Nov 2021 01:31 PM

கனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு: நிவாரண உதவிகள் வழங்கினார்

முதல்வர் மு.க.ஸ்டாலின் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னை

கனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளை மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (30.11.2021) வடகிழக்குப் பருவமழையை ஒட்டியும், வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாகவும், சென்னையில் ஏற்பட்ட கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார்.

சென்னையில், செம்மஞ்சேரி பகுதிகளைப் பார்வையிட்டு, ஆய்வு செய்து, சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

தமிழகம் முழுவதும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி தொடங்கி இரவு, பகல் பாராமல் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று சீரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருவதால் பெரும்பாலான இடங்களில் மழை நீர் வடிந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இன்று காலை (30.11.2021) சென்னை, செம்மஞ்சேரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு பகுதிகளைப் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

மேலும், அப்பகுதியில் மழை நீரை வெளியேற்றும் பணிகளைப் பார்வையிட்டு, சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். முதல்வர் பாதிக்கப்பட்ட அப்பகுதிகளுக்கு நடந்து சென்று, அப்பகுதி மக்களிடம் அவர்களது தேவைகள் குறித்துக் கேட்டறிந்தார். அத்துடன் மழைநீர் சூழ்ந்திருக்கும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, செம்மஞ்சேரி, குமரன் நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் கோவிட் தடுப்பூசி முகாம்களை முதல்வர் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

பின்னர், ஒக்கியம் மேட்டில் உள்ள காரப்பாக்கம் ஏரியில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கை முதல்வர் பார்வையிட்டார். மேலும், அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார்.

முன்னதாக, நேற்று (29.11.2021) செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டபோது, குட்வில் நகர் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, அக்குடியிருப்புப் பகுதியைப் பார்வையிட்டார். உடனடியாக அங்கு தேங்கியிருந்த மழைநீரை வெளியேற்ற அலுவலர்களுக்கு ஆணையிட்டதன் அடிப்படையில் மின்மோட்டார்களைக் கொண்டு தேங்கியிருந்த மழைநீர் அகற்றும் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அங்கு நீர்வடிய வைக்கப்பட்டது.

பின்னர், இன்று (30.11.2021) காலை அப்பகுதி மக்களுடன் முதல்வர் தொலைபேசியில் தொடர்புகொண்டு தற்போது நிலைமை சீர் செய்யப்பட்டதா எனக் கேட்டறிந்தார். உடனடி நடவடிக்கைக்காக அப்பகுதி பொதுமக்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்த ஆய்வின்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே. கோபால், இ.ஆ.ப., வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் கே. வீரராகவ ராவ், இ.ஆ.ப., தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.கோவிந்த ராவ், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x