Published : 30 Nov 2021 03:07 AM
Last Updated : 30 Nov 2021 03:07 AM
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா (79).
இவர் தனது பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த ஜூன் 16-ம் தேதி கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது 4 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவருக்கு உடந்தையாக இருந்ததாக நடன ஆசிரியை சுஷ்மிதாவையும் சிபிசிஐடி போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
பள்ளியின் முன்னாள் மாணவிகள் 2 பேர் கொடுத்த புகார்களின்பேரில், அவர் மீது தனித்தனியாக 2 பெண் வன்கொடுமை வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிவசங்கர் பாபா மீதான முதல் போக்சோ வழக்குக்காக 40 சாட்சியங்களின் அடிப்படையில் 300 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகைசெங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. சிவசங்கர்பாபா, ஆசிரியை பாரதி, நடன ஆசிரியை சுஷ்மிதா, தீபா ஆகிய 4 பேர் மீதும் போலீஸார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
செங்கல்பட்டு பள்ளி வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் சிவசங்கர் பாபாவுக்கென ரகசிய அறைஉள்ளது. அவரது கைரேகை இருந்தால் மட்டுமே இந்த அறையை திறக்க முடியும். அவர் சிறையில் இருந்ததால் இந்த அறையை திறக்க முடியவில்லை. இதனால், அந்த அறைக்கு சிபிசிஐடி போலீஸார் சீல் வைத்திருந்தனர்.
தடயவியல் பரிசோதனை
இந்நிலையில், நீதிமன்றத்தின் அனுமதி பெற்று சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீஸார் நேற்று பள்ளிக்கு அழைத்து வந்தனர். அவரது விரல் ரேகையை வைத்து அறையை திறந்தனர். ‘‘அதில் இருந்து லேப்டாப், செல்போன், ஆவணங்களை கைப்பற்றியுள்ளோம். அவற்றை தடயவியல் சோதனைக்கு உட்படுத்த இருக்கிறோம்’’ என்று சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT