Published : 29 Nov 2021 03:06 AM
Last Updated : 29 Nov 2021 03:06 AM

ரூ.13 லட்சம் மோசடி புகாரில் முன்னாள் முதல்வர் பழனிசாமியின் உதவியாளர் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.13 லட்சம் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் முன்னாள் முதல்வர் பழனிசாமியின் உதவியாளர் கைது செய்யப்பட்டார்.

சேலத்தை அடுத்த ஓமலூர் நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி (45). இவர் முன்னாள் முதல்வர் பழனிசாமியிடம் உதவியாளராக பல ஆண்டுகள் பணியாற்றி வந்தார். இவர் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாகக் கூறி, கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (28) என்பவர், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த மாதம் புகார் அளித்தார்.

புகாரில், ‘தனக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி முன்னாள் முதல்வர் பழனிசாமியின் உதவியாளர் மணி மற்றும் அதிமுக பிரமுகர் செல்வகுமார் ஆகியோர் ரூ.17 லட்சம் பெற்றனர். ஆனால், வேலை வாங்கித் தரவில்லை.

மேலும், கொடுத்த பணத்தை கேட்டபோது, ரூ.4 லட்சம் கொடுத்துவிட்டு மீதியைத் தராமல் மிரட்டுகின்றனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து, சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். டிஎஸ்பி இளமுருகன் தலைமையில் தனிப்படை அமைத்து மணி மற்றும் செல்வகுமாரை தேடி வந்தனர்.

முன்ஜாமீன் கோரி மணி தாக்கல் செய்த மனுக்கள் சேலம் முதன்மை மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடியாயின.

இந்நிலையில், ஓமலூர் அடுத்த நடுப்பட்டியில் மணியை, குற்றப்பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள செல்வகுமாரை போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x