Published : 29 Nov 2021 03:07 AM
Last Updated : 29 Nov 2021 03:07 AM

கூவம் ஆற்றில் பெருக்கெடுத்த மழை வெள்ளம்: நீரில் மூழ்கிய அடையாளம்பட்டு, வேலப்பன்சாவடி தரைப்பாலங்கள்

கூவம் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் மழை வெள்ளத்தால், அடையாளம்பட்டு, வேலப்பன்சாவடி தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியதால், அப்பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்தும் கன மழையாக பெய்துவருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. அந்த வகையில், கூவம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

வெள்ளத்தால் மதுரவாயல்- அடையாளம்பட்டு, வானகரம்-அடையாளம்பட்டு, வேலப்பன்சாவடி- திருவேற்காடு ஆகிய 3 தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. ஒன்றரை அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் செல்வதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளன.

இதனால், மதுரவாயல் பகுதியிலிருந்து அடையாளம்பட்டு, நொளம்பூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதிகளுக்கு நீண்ட தூரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. அதேபோல், சென்னையிலிருந்து, வேலப்பன்சாவடி வழியாக திருவேற்காடுக்கு செல்லும் மாநகர பஸ்கள், வடநூம்பல், ராஜாங்குப்பம், வானகரம் வழியாக நீண்ட தூரம் சுற்றி சென்று வருகின்றன.

கூவம் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் மழை வெள்ளம், திருவேற்காட்டில் கூவம் ஆற்றுக்கரையோரம் உள்ள சண்முகாபுரம், பத்மாவதி நகர் பகுதிகளில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளினுள் புகுந்துள்ளது. இதனால், அவ்வீடுகளில் இருந்த 226 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x