Published : 28 Nov 2021 05:19 PM
Last Updated : 28 Nov 2021 05:19 PM

வெள்ள பாதிப்பு நிவாரணப் பணிகளில் சுணக்கம் இல்லை: அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் தகவல்

தமிழகத்தில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் நிவாரணப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் விவரம் வருமாறு:

தமிழ்நாட்டில் 25.10.2021 முதல் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், 38 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில் மாநில சராசரி 14.64 மி.மீ. ஆகும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 53.81 மி.மீட்டரும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 51.88 மி.மீட்டரும், திருவாரூர் மாவட்டத்தில் 41.70 மி.மீட்டரும், சென்னையில் 40.09 மி.மீட்டரும், இராமநாதபுரம் மாவட்டத்தில் 37.46 மி.மீட்டரும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 37.13 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது.

பாம்பன் (114.2 மி.மீ.), மண்டபம் (113.2 மி.மீ.) மாமல்லபுரம் (108.2 மி.மீ.), நன்னிலம் (97.4 மி.மீ.), தங்கச்சிமடம் (88.7 மி.மீ.), சீர்காழி (78.4 மி.மீ.) தஞ்சாவூர் (75 மி.மீ.), அண்ணாமலை நகர் (73.4 மி.மீ.), கேளம்பாக்கம் (72.1 மி.மீ.), பரங்கிப்பேட்டை (69.6 மி.மீ.), திருப்போரூர் (69.5 மி.மீ.), காட்டுமன்னார்கோவில் (67.3 மி.மீ.), செய்யூர் (67.0 மி.மீ.), மஞ்சளாறு (65.8 மி.மீ.) ஆகிய 14 இடங்களில் கனமழை பெய்துள்ளது.

வடகிழக்கு பருவமழை 01.10.2021 முதல் 27.11.2021 வரை 615.04 மி.மீ பெய்துள்ளது. இது இயல்பான மழையளவான 349.1 மி.மீட்டரை விட 76 சதவீதம் கூடுதல் ஆகும்.

முக்கிய அணைகள் / நீர்த்தேக்கங்களில் நீர் வரத்து மற்றும் நீர் வெளியேற்ற விபரம்:

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 28.11.2021 நாளிட்ட அறிக்கையில், இன்று 28.11.2021 வட கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில், இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

நாளை 29.11.2021, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், தென்காசி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில், இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

தேசிய பேரிடர் மீட்பு படையின் 4 குழுக்களில் சென்னையில் - 2 குழுக்கள், திருவள்ளுரில் - 1 குழு, காஞ்சிபுரத்தில் - 1 குழு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

வைகை ஆற்றிலிருந்து திறந்து விடப்பட்ட 9000 கன அடி உபரி நீர் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்தடைந்த காரணத்தால், பரமக்குடி நகரில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 224 நபர்கள் நிவாரண முகாமில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆற்றங்கரையோரம் உள்ள அனைத்து குடியிருப்புகளுகம், கிராமங்களும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில், பெய்த கனமழையின் காரணமாக 2000 ஹெக்டேரில் பயிரிடப்பட்ட நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளதாகவும், ஓடம்போகையாற்றின் ஓரம் உள்ள ஒரு ஊராட்சி சாலையின் ஒரு பகுதி மட்டும் நீரில் மூழ்கியுள்ளது. ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 1700 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி வட்டம், திருவேற்காடு கிராமம் கூவம் ஆற்றின் கரையில் உள்ள சண்முகா நகர், வேலப்பன் நகர் மற்றும் பத்மாவதி நகர் போன்ற பகுதிகளில் கூவம் ஆற்றின் மழை நீர் புகுந்ததால், இந்தப் பகுதிகளில் வசிக்கும் 160 நபர்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாமில் தங்க வைக்கபட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில், தாழ்வான பகுதிகளில் 228 அதிக திறன் கொண்ட பம்புகள் கொண்டு வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில், மண்டபம் பேரூராட்சி பகுதியில் இரண்டு பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ள நீர் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

கடலூர் மாவட்டத்தில், தாழ்வான பகுதிகளில் அதிக திறன் கொண்ட பம்புகள் கொண்டு வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

நிவாரண முகாம்கள்

திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, பெரம்பலூர், அரியலூர், இராணிப்பேட்டை, திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் மொத்தம் 188 முகாம்களில், 15016 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் 1048 நபர்கள் 7 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று 98350 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில், 433 நபர்கள் 5 நிவாரண முகாம்களிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில், 2041 நபர்கள் 37 நிவாரண முகாம்களிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 499 நபர்கள் 15 நிவாரண முகாம்களிலும், கடலூர் மாவட்டத்தில், 619 நபர்கள் 4 நிவாரண முகாம்களிலும், நாகப்பட்டினம் மாவட்டத்தில், 3756 நபர்கள் 10 நிவாரண முகாம்களிலும், தஞ்சாவூர் மாவட்டத்தில், 461 நபர்கள் 2 நிவாரண முகாம்களிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில், 431 நபர்கள் 9 நிவாரண முகாம்களிலும், ராமநாதபுரம் மாவட்டத்தில், 224 நபர்கள் 1 நிவாரண முகாமிலும், தூத்துக்குடி மாவட்டத்தில், 1022 நபர்கள் 13 நிவாரண முகாம்களிலும், பெரம்பலூர் மாவட்டத்தில், 512 நபர்கள் 17 நிவாரண முகாம்களிலும், அரியலூர் மாவட்டத்தில், 47 நபர்கள் 1 நிவாரண முகாமிலும், இராணிப்பேட்டை மாவட்டத்தில், 63 நபர்கள் 1 நிவாரண முகாமிலும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், 350 நபர்கள், 2 நிவாரண முகாம்களிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில், 603 நபர்கள், 16 நிவாரண முகாம்களிலும், திருவண்ணாமலை மாவட்டத்தில், 641 நபர்கள் 18 நிவாரண முகாம்களிலும், வேலூர் மாவட்டத்தில், 3314 நபர்கள் 37 நிவாரண முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டங்களில் பாதிப்பு நிலவரம்

* கடந்த 24 மணி நேரத்தில், கடலூர் (1), தூத்துக்குடி (1), மாவட்டங்களில் 2 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

* 286 கால்நடை இறப்பு பதிவாகியுள்ளது.

* 1720 குடிசைகள் பகுதியாகவும், 94 குடிசைகள் முழுமையாகவும், ஆக மொத்தம் 1814 குடிசைகளும், 309 வீடுகள் பகுதியாகவும், 1 வீடு முழுமையாகவும், ஆக மொத்தம் 310 வீடுகள் சேதமடைந்துள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சி

* மழை நீர் தேங்கியுள்ள 464 பகுதிகளில், 86 பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர் அகற்றப்பட்டுள்ளது. எஞ்சிய 378 பகுதிகளில் அதிக திறன் கொண்ட பம்புகள் மூலம் நீர் அகற்றப்பட்டு வருகிறது.

* சாலைகளில் விழுந்த 3 மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 13825 மருத்துவ முகாம்கள் மூலம் 4,71,267 நபர்கள் பயனடைந்துள்ளனர்.

* மழை நீர் சூழ்ந்த பகுதிகளில், மழை நீரை வெளியேற்ற 46 JCB-களும், 820 அதிக திறன் கொண்ட பம்புகளும் தயார் நிலையில் உள்ளன. 54 படகுகள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

* 4,584 புகார்கள் வரப்பெற்று, 809 புகார்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய புகார்களின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

* சென்னையில் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் 1070, மாவட்டங்களில் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியுடன், 24 மணி நேரமும் இயங்கி வருகிறது.

மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி தொடர்பான புகார்களுக்கு பொதுமக்கள் 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சரின் ஆய்வின் போது, கூடுதல் தலைமைச் செயலர் /வருவாய் நிருவாக ஆணையர் க. பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலர் குமார் ஜெயந்த், பேரிடர் மேலாண்மை இயக்குநர் டாக்டர் என். சுப்பையன், மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x