Published : 27 Nov 2021 06:32 PM
Last Updated : 27 Nov 2021 06:32 PM

‘‘பெண்களுக்கு அத்தியாவசியப் பரிசு’’- சென்னை தபால் நிலையத்திற்கு வந்த போதை மாத்திரை, கஞ்சா பார்சல் பறிமுதல்

சென்னை வெளிநாட்டு தபால் நிலையத்திற்கு வந்த 52 எம்டிஎம்ஏ மாத்திரைகள், 5 கிராம் மெத் கிரிஸ்டல் மற்றும் 128 கிராம் கஞ்சா கொண்ட மூன்று பார்சல்களை சென்னை விமான நிலைய சுங்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

நெதர்லாந்தில் இருந்து வந்த முதல் இரண்டு பார்சல்களும் மதுரையில் வசிக்கும் இரு வேறு நபர்களின் பெயருக்கு அனுப்பப்பட்டிருந்தன. முதல் பார்சலைத் திறந்து பார்த்தபோது, எம்டிஎம்ஏ என சந்தேகிக்கப்படும் மொத்தம் 28 கிராம் எடை கொண்ட 52 பச்சை நிற மாத்திரைகள் இருந்தன.

அவற்றின் மதிப்பு ரூ 2.6 லட்சம் ஆகும். இரண்டாவது பார்சலில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய 5 கிராம் மெத் கிரிஸ்டல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மூன்றாவது வழக்கில், அமெரிக்காவிலிருந்து வந்த பார்சல் சென்னையைச் சேர்ந்த நபருக்கு அனுப்பப்பட்டு, ‘‘பெண்களுக்கான அத்தியாவசியப் பரிசு’’ என்று அதன் மேல் குறிப்பிடப்பட்டிருந்தது. சோதனையிட்டதில், 128 கிராம் கஞ்சா பார்சலில் மறைத்து வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட மூன்று பார்சல்களில் இருந்தவற்றின் மதிப்பு ரூ 3.12 லட்சம் ஆகும். இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று முதன்மை சுங்கத்துறை ஆணையர், சென்னை விமான நிலைய ஆணையரகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x