சென்னையில் நாளை 12-வது மெகா தடுப்பூசி முகாம்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
2 min read

சென்னையில் நாளை நடைபெறவுள்ள 12-வது மெகா தடுப்பூசி முகாமைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

"28.11.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று 200 வார்டுகளில் நடைபெறவுள்ள 12-வது மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமில் பொதுமக்கள் கோவிட் தடுப்பூசி செலுத்திப் பயனடையுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களை கோவிட் பெருந்தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் பல்வேறுவிதமான பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுமக்களுக்கு கோவிட் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் வெளியில் வரும் பொழுது முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்ற தமிழக அரசின் பாதுகாப்பு வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்றவும், தவறாமல் அனைவரும் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 26.08.2021 அன்று ஒரு வார்டிற்கு 2 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் என 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு 1,35,865 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

முதல்வர் ஸ்டாலின், தமிழக மக்கள் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தும் வகையில் தீவிர தடுப்பூசி இயக்கமாகச் செயல்படுத்தி மாநிலம் முழுவதும் மெகா கோவிட் தடுப்பூசி முகாம்களை நடத்திட உத்தரவிட்டார்.

அதனடிப்படையில், மாநிலம் முழுவதும் கோவிட் மெகா தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு, பொதுமக்கள் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் நாட்களில் வார்டிற்கு 2 வீதம் 400 நிரந்தர மருத்துவ முகாம்கள், வார்டிற்கு 6 வீதம் 1200 நடமாடும் மருத்துவ முகாம்கள் என மொத்தம் 1600 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை நடத்தப்பட்ட 11 மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்களின் மூலம் 16,72,673 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தொடர்ந்து, நாளை (28.11.2021) பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் 1600 முகாம்களுடன் 12-வது கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 2 லட்சம் நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே கோவிட் தொற்று பாதிப்பிலிருந்து முழுமையாக நம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையில் முழு எதிர்ப்பு சக்தி கிடைக்கும். பெருநகர சென்னை மாநகராட்சியில் தற்பொழுது 9,60,465 கோவிட் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைந்துள்ள இடங்களைப் பொதுமக்கள் https://chennaicorporation.gov.in/gcc/covid-details/mega_vac_det.jsp என்ற மாநகராட்சியின் இணையதள இணைப்பின் வாயிலாகத் தெரிந்துகொள்ளலாம்.

எனவே, கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நாட்களைக் கடந்துள்ள நபர்களும் அலட்சியமாக இல்லாமல் நடைபெறவுள்ள தடுப்பூசி முகாமைப் பயன்படுத்திக் கொண்டு கோவிட் தடுப்பூசியைத் தவறாமல் செலுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்".

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in