கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசு நிவாரணம் கிடைக்க உதவ வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு எதிர்கால நலனுக்கான அரசின் நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் முயற்சிகளைக் கூடுதலாக்க வேண்டும் என மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

"கரோனா தொற்றினால் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையோ இழந்த குழந்தைகளின் எதிர்காலத்திற்கான மாநில அரசு மற்றும் மத்திய அரசு தரும் நிவாரணத்தினைப் பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகள் கூடுதலாக்கப்பட வேண்டும்.

ஏனெனில் நடைபெற்று முடிந்த மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் சமூகப் பாதுகாப்புத் துறையின் சார்பில் கொடுக்கப்பட்ட விவரத்திற்கும் நிவாரணத்திற்காக பதிவு செய்துள்ள எண்ணிக்கைக்கும் இடைவெளி கூடுதலாக உள்ளது.

சமூகப் பாதுகாப்புத் துறையின் விவரங்களின்படி மதுரை மாவட்டத்தில் மட்டும் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 478. அதில் 258 பேர் ஆய்வு செய்யப்பட்டு இன்னும் 163 பேர் ஆய்வு செய்யப்பட வேண்டிய நிலை உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இதில் 13 பேருக்கு மட்டுமே நிவாரணத்திற்கான பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நிவாரணம் குறித்த பெரிய அளவில் மக்களிடம் செய்திகள் சென்றடையாத நிலை உள்ளது. கரோனா நெருக்கடி காலத்தில் இழப்புகள் குறித்து உரிய சான்றிதழ் பெற முடியாதவர்களுக்குத் தன்னார்வலர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களும் உதவ வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

முதல்வர் பொது நிவாரண நிதி;
A.கணேசன்
சமூகப் பாதுகாப்புத் திட்டம்
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக 3 வது தளம்.


பிரதமர் நிவாரண நிதி;
K.ஶ்ரீதர்
பாதுகாப்பு அலுவலர்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மதுரை.

மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகள் நிவாரணத்திற்காக மேற்குறிப்பிட்ட அதிகாரிகளிடம் தங்களது விண்ணப்பங்களை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்."

இவ்வாறு எம்.பி., சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in