Published : 26 Nov 2021 07:22 PM
Last Updated : 26 Nov 2021 07:22 PM

ஜம்புக்கல் கரடு மலையில் தனியார் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்: மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை

ஜம்புக்கல் கரடு மலையில் தனியார் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் எனவும் மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்கவும் ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

உடுமலை அமராவதி நகர் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

ஆண்டியக்கவுண்டனூர் ஊராட்சி ஜம்புக்கல் கரடு மலையில் தனியார் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். இந்த பகுதி மலைப் பகுதிகளில் விவசாயம் செய்வதற்கு ஏதுவாக மண் உள்ள பகுதியாகும்.

இந்த நிலையில் சுமார் 500 ஏக்கர் பரப்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதியால் பல்வேறு சமுதாய மக்களுக்கும், விவசாயம் செய்ய பட்டா வழங்கப்பட்டது. இதில் விவசாயமும் செய்து வந்தனர். பருவநிலை மாற்றத்தால் விவசாயம் செய்ய முடியாமல், விவசாயக் கூலித் தொழிலாளர்களாக இடம் பெயர்ந்தனர்.

இந்த நிலையில் தனிநபர் மற்றும் அவரது குடும்பத்தினர் மலைக்கு செல்லும் பொதுப்பாதையில் கம்பிவேலி மற்றும் கேட் அமைத்து மற்றவர்கள் மலையில் தங்கள் நிலங்களுக்கே செல்ல முடியாதபடி தடுப்புகளை ஏற்படுத்தி, பொது உரிமையை பறித்துள்ளனர். அங்கு நடந்த முறைகேடுகள் தொடர்பாக உடுமலை கோட்டாட்சியரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

ஆகவே இதில் உரிய நடவடிக்கை எடுப்பதுடன், முறையாக நில அளவை செய்து உரிமை கோரப்படாத விவசாயம் செய்ய ஏதுவான நிலப்பகுதிகளை மலைவாழ் மக்களுக்கும், ஏழை, எளிய விவசாயக் கூலிகளுக்கும் பட்டா வழங்கி வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

உடுமலைப்பேட்டை வன உரிமை கரட்டுபதி செட்டில்மென்ட் மலைவாழ் மக்கள் அளித்த மனு:

உடுமலை வட்டம் கல்லாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கரட்டுப்பதி செட்டில்மென்ட் 75 குடும்பங்கள் எரவாளன் பழங்குடியினத்தை சேர்ந்த சிறு எண்ணிக்கையிலான மக்கள் வாழ்ந்து வருகிறோம்.

எங்களுக்கு 2006-ம் ஆண்டு வன உரிமைச்சட்டப்படி வீட்டுமனை வழங்குவதாக தெரிவித்தனர். அதன்படி எங்களது அனுபவத்தில் உள்ள முழு இடத்துக்கு பட்டா வழங்காமல் அரை சென்ட் இடத்துக்கு மட்டும் அனுபவ உரிமை வழங்கி உள்ளனர். எங்கள் செட்டில்மென்டில் தற்போது 43 குடும்பங்களுக்கு பசுமை வீடுகள் கட்ட, ஆட்சியர் செயல்முறை ஆணை வழங்கி உள்ளீர்கள். எங்களில் 10 பேர், பசுமை வீடுகள் கட்ட 600 சதுர அடி தேவைப்படுகிறது.

ஆனால் எங்களுக்கு 215 சதுர அடிக்கு தான் பட்டா வழங்கி உள்ளனர். போதிய இடம் இல்லாததால், வீடு கட்ட முடியாது என்ற அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். எங்களில் பலர் வனத்துறையில் நீண்ட நாட்களாக வேட்டைத் தடுப்பு காவலர்களாக பணியாற்றி வருகிறோம்.

எங்களுக்கு வழங்கிய பட்டாவில் தான் அரை சென்ட் கொடுத்து ஏமாற்றி உள்ளனர். நாங்களும் பட்டாவை பார்க்காமல் வாங்கி வைத்துவிட்டோம். எங்களுக்கு அருகில் போதிய இடம் இருப்பதால், பசுமை வீடு கட்டுவதற்கும், எங்களது வீட்டுப் பகுதியில் குறைந்தபட்சம் 5 சென்ட் இடம் ஒதுக்கித்தர வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x