Published : 26 Nov 2021 04:04 PM
Last Updated : 26 Nov 2021 04:04 PM

ரூ.500 லஞ்சம்: 9 ஆண்டு சிறை தண்டனை பெற்ற உதகை வருவாய் ஆய்வாளர்

உதகை

ரூ.500 லஞ்சம் பெற்ற வழக்கில் உதகை வருவாய் ஆய்வாளருக்கு 9 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து உதகை லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீலகிரி மாவட்டம் உதகை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றியவர் தாண்டவ நடராஜன். கடந்த 2007-ம் ஆண்டு உதகையைச் சேர்ந்த ஜான்பாஸ்கோ என்பவர் வாரிசு சான்றிதழுக்காக உதகை வட்டாட்சியர் அலுவலத்தில் விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பத்தைப் பெற்ற கிராம வருவாய் அலுவலர், வருவாய் ஆய்வாளருக்கு அனுப்பியுள்ளார். வருவாய் ஆய்வாளராக இருந்த தாண்டவ நடராஜன், ஜான்பாஸ்கோவிடம் சான்றிதழ் அளிக்க ரூ.500 லஞ்சம் கேட்டுள்ளார். இதனால், ஜான்பாஸ்கோ ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், ஜான்பாஸ்கோவிடம் ரசாயனம் தடவிய பணத்தை வழங்கி, வருவாய் ஆய்வாளரிடம் வழங்கக் கூறினர். வருவாய் ஆய்வாளர் தாண்டவ நடராஜனிடம், ஜான்பாஸ்கோ பணத்தை வழங்கும்போது, ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தாண்டவ நடராஜனைக் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு உதகையில் உள்ள ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

நீதிபதி சி.ஸ்ரீதர், குற்றவாளியான தாண்டவ நடராஜனுக்கு 9 ஆண்டு சிறை தண்டனை வழங்கினார். மேலும், ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். ரூ.500 லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளருக்கு 14 ஆண்டுகளுக்குப் பின்னர் 9 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது உதகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x