Last Updated : 08 Mar, 2016 06:19 PM

 

Published : 08 Mar 2016 06:19 PM
Last Updated : 08 Mar 2016 06:19 PM

ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு மேலும் அவகாசம்

முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயத்தை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு ஜூன் 1-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 29.3.2012--ல் திருச்சியில் கொலை செய்யப்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். ராமஜெயம் கொலையாகி 4 ஆண்டுகளாகியும் இதுவரை குற்றவாளிகள் பிடிபடவில்லை. இதையடுத்து, ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது மனைவி லதா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இறுதியாக ஜனவரி 5-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ராமஜெயம் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து முக்கிய தகவல்கள் கிடைத்திருப்பதாகவும், அவர்களை விரைவில் கைது செய்வதாகவும், இதனால் மேலும் 3 மாதம் அவகாசம் தர வேண்டும் எனக்கேட்டு சிபிசிஐடி போலீஸ் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து சிபிசிஐடி போலீஸாருக்கு குற்றவாளிகளை கண்டுபிடிக்க மார்ச் 8 வரை அவகாசம் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி வி.எஸ்.ரவி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன், அரசு வழக்கறிஞர் மயில்வாகன ராஜேந்திரன் ஆகியோர் சிபிசிஐடி போலீஸாரின் 6-வது (இதுவரை 5 முறை ரகசிய அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன) ரகசிய அறிக்கையை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதி, கொலை நடைபெற்று 4 ஆண்டாகியும் குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல், ஒவ்வொரு முறையும் காலஅவகாசம் கேட்பதற்கு அதிருப்தி தெரிவித்தார்.

தொடர்ந்து கே.செல்லப்பாண்டியன் வாதிடும்போது, ‘ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணை முறையாக, நியாயமாக நடைபெற்று வருகிறது. விசாரணை விவரங்கள் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் திருப்தியடைந்த நீதிமன்றம், விசாரணையை தொடர சிபிசிஐடி போலீஸாருக்கு அவகாசம் வழங்கியது. சிபிசிஐடி போலீஸ் விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார்.

லதா ராமஜெயம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.கே.மாணிக்கம் வாதிடும்போது, கொலை நடைபெற்று 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் குற்றவாளிகளை போலீஸார் கண்டுபிடிக்காமல் மெத்தனமாக உள்ளனர் என்றார். இதையடுத்து சிபிசிஐடி போலீஸாருக்கு கால அவகாசம் வழங்கி விசாரணையை ஜூன் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x