

103 ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் கனமழை பெய்வதால் ஏரி, குளங்கள் நிரம்பி வழிவதாக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்துள்ள சூளாங்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள மணிமுக்தா அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தண்ணீர் திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களைன் சந்தித்த அமைச்சர் எ.வே.வேலு,
"தமிழ்நாடு முழுவதும் 103 ஆண்டுகளுக்கு பின்னர் அதிகளவு தற்போது மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதுமுள்ள ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி நீர் வெளியேறி வருகிறது. தமிழக முதல்வர் தமது நிர்வாக திறனால் அவ்வப்போது மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆலோசனை வழங்கி, தமிழகம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் விரைந்து வெள்ள நிவாரண பணிகள் மேற்கொண்டு வருகிறார்.
மேலும் தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு மேற்கொள்ள வந்த மத்திய அதிகாரிகள் குழுக்களிடம் தமிழகத்திற்கு தேவையான வெள்ள நிவாரணங்களை வழங்க வேண்டும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
வடகிழக்கு பருவமழையினால்;, நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 12 பாலங்களும், 364 பெரிய கல்வெட்டுகளும், பல இடங்களில் சாலைகளும் சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இச்சேதங்களை சரிசெய்ய முதற்கட்டமாக ரூ.152 கோடியும், முழுவதுமாக புதிய பாலங்கள் மற்றும் சாலைகள் அமைப்பதற்கு ரூ.1,443 கோடியும் மத்திய குழுவிடம் கோரப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழையினால் கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், மணிமுக்தா நதி அணையிலிருந்து 24.11.2021 முதல் 10.02.2022 வரை 79 நாட்களுக்கு மொத்தம் 550.75 மி.க. அடிக்கு மிகாமல் திறந்துவிட தமிழ்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, நேற்று மணிமுக்தா நதி அணை திறக்கப்பட்டுள்ளது. இவ்வணை திறப்பினால் 5,493 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதன்மூலம் கள்ளக்குறிச்சி மற்றும் சங்கராபுரம் வட்டத்தில் 17 கிராமங்கள் பயனடைகிறது. மேலும், நீர் வரத்திற்கேற்ப தொடர்ந்து அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிப்புகள் அதிகம் ஏற்படாதவாறு மாவட்ட ஆட்சியர், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கி அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் சிறப்பாக மேற்கொண்டதால், பெருமளவு வெள்ள சேதாரங்கள் தடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், சங்கராபுரம், ரிஷிவந்தியம் மற்றும் உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர்கள், தா.உதயசூரியன், க.கார்த்திகேயன் மற்றும் ஏ.ஜே.மணிக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.